(க.சிவலிங்கமூர்த்தி) சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் கவலை தெரிவித்துள்ள சுரேஷ் சலேவின் மனைவி, “கடந்த புதன்கிழமை சட்டத்தரணி அவரைச் சந்தித்த போது, சுரேஷ் சலே தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வழங்கியிருந்தார். அதில், தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்க வேண்ட…

(க.சிவலிங்கமூர்த்தி) சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் கவலை தெரிவித்துள்ள சுரேஷ் சலேவின் மனைவி, “கடந்த புதன்கிழமை சட்டத்தரணி அவரைச் சந்தித்த போது, சுரேஷ் சலே தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வழங்கியிருந்தார். அதில், தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது ஜனாதிபதி, ரவி, ஷானி மற்றும் மேலும் சில அதிகாரிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயத்தை அதிகாரிகள் மிகுந்த முக்கியத்துவத்துடன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று (27) சுரேஷ் சலேவை பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே சலேவின் மனைவி மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை இதய சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றார்கள். அங்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். அந்த பரிசோதனைகளின் பின்னர் அவருக்கு ஒரு குறிப்பிட்ட உடல்நலக் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் தற்போது அவர் இதய சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் கூறுவதாவது, மீண்டும் மீண்டும் நெஞ்சுவலி ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகும். அதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. அமைச்சர்கள் அல்லது வெளியில் இருப்பவர்கள் என்ன கூறினாலும், இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே உண்மையான நிலையை அறிந்திருக்கிறார்கள். சுரேஷ் சலே தற்போது நல்ல நிலையில் இல்லை. நாளுக்கு நாள் பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையைப் பார்த்தால், அதிகாரிகள் சுரேஷ் சலே உயிரிழக்கும் வரை காத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே எங்களுக்கு ஏற்படுகிறது. இது மிகவும் கவலைக்கிடமான நிலை. நாங்கள் விசாரணைகளை நிறுத்துமாறு கூறவில்லை. தேவையான அனைத்து விசாரணைகளும், மருத்துவ பரிசோதனைகளும் தொடரலாம். ஆனால் சுரேஷ் சலேவை உடனடியாக உரிய பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். கடந்த புதன்கிழமை சட்டத்தரணி அவரைச் சந்தித்த போது, சுரேஷ் சலே தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வழங்கியிருந்தார். அதில், தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது ஜனாதிபதி, ரவி, ஷானி மற்றும் மேலும் சில அதிகாரிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விடயத்தை அதிகாரிகள் மிகுந்த முக்கியத்துவத்துடன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலை மிகவும் ஆபத்தானது. சுரேஷ் சலேவின் உடல்நிலை எந்த நேரத்திலும் மேலும் மோசமடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை எந்தச் சூழ்நிலையிலும் கைவிடப் போவதில்லை. தொடர்ந்து அதனை முன்னெடுத்துச் செல்வதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.