நாட்டில் அண்மைக்காலமாகத் தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, இந்தப் பொசன் பண்டிகை மற்றும் விடுமுறைக் காலப்பகுதியில் ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட ஏனைய நீர்நிலைகளுக்குக் குளிப்பதற்காகவு…
நாட்டில் அண்மைக்காலமாகத் தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, இந்தப் பொசன் பண்டிகை மற்றும் விடுமுறைக் காலப்பகுதியில் ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட ஏனைய நீர்நிலைகளுக்குக் குளிப்பதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செல்லும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் தலைமையகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொசன் பண்டிகையை முன்னிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இந்த விவரங்களை வெளியிட்டார்.அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்.. அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "தற்போது நிலவும் காலநிலை மாற்றங்கள் மற்றும் விடுமுறைச் சூழல் காரணமாகத் தண்ணீர் சார்ந்த விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் முன்னெப்போதையும் விடக் கணிசமாக அதிகரித்துள்ளன.எமது உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரையான சில மாத காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் சுமார் 75 பேர் தண்ணீரில் மூழ்கிப் பரிதாபமாகத் தமது உயிர்களை இழந்துள்ளனர். இந்தத் துயர நிலைமை மேலும் தொடராமல் தடுப்பது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும்.
இந்த நீண்ட விடுமுறைக் காலத்தில் புனித இடங்களுக்கும், நீர்நிலைகளுக்கும் வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், அவசர விபத்துகளின் போது உதவுவதற்காகவும் நாடு முழுவதும் உள்ள பிரதான நீர்நிலைகளை மையப்படுத்தி பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள 48 பொலிஸ் பிரிவுகளில், சுமார் 31 பிரிவுகளைச் சேர்ந்த ஆபத்தான நீர்நிலைப் பகுதிகளில் இந்த விசேட உயிர் காக்கும் குழுக்கள் முழுநேரமாக இயங்கி வருகின்றன.
பொதுமக்கள் தங்களின் குடும்பத்தினருடன் நீர்நிலைகள் மற்றும் அறிமுகமில்லாத வினோத இடங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள ஆபத்துகளை முன்கூட்டியே உணர்ந்து பொலிஸாரால் வீழ்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் 'அபாயகரமான பகுதி' எனக் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகளின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து, அத்தகைய பகுதிகளுக்குள் இறங்குவதையோ அல்லது குளிப்பதையோ முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.குளிக்கும் போதோ அல்லது நீராடும் போதோ ஏதேனும் அவசர ஆபத்துகள் அல்லது தேவைகள் ஏற்படும் பட்சத்தில், அவ்விடங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உயிர் காப்பவர்களின் உதவியை எவரும் உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.

