இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கல்வி முறையில் நிலவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு…

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கல்வி முறையில் நிலவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு முறையான தீர்வினைத் தரக்கூடிய தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சீர்திருத்தமே மாணவர்களின் எதிர்கால நலனுக்கு அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று(28) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாட்டில் தற்போது கல்விச் சீர்திருத்தத்துக்காக 5 பிரத்தியேகக் குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனைகள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.

எனினும், தற்போதைய திட்டங்களின் தெளிவற்ற தன்மையே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டிலும் பாடத்திட்டங்கள் மாற்றமடையும் எனக் கூறப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.வருடங்கள் கடந்தும் கல்வி முறையில் உண்மையாகவே மாற வேண்டிய பாடத்திட்டங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.

ஜனாதிபதி செயலாளரின் கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில், நாட்டில் உள்ள 6500 பாடசாலைகளில் தேவையான வசதிகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 100 மொத்தப் பாடசாலைகளில், குறைந்தபட்சம் 500 பாடசாலைகளிலாவது இந்த வசதிகள் உண்மையாகவே முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தமொன்றை அவசரமாகச் செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.