பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விசேட எச்சரிக்கை அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (29) முற்பகல் வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக…

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விசேட எச்சரிக்கை அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (29) முற்பகல் வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 – 3.0 மீற்றர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அந்த அறிவித்தலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கடற்றொழில் மற்றும் கடற்படைச் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.