ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வரலாறு காணாத வகையில் வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாகப் பிரான்சில் மட்டும் இதுவரை சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொதுச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 20ஆம் திகதி தொடங்கிய இந்த உஷ்ண அலை, ஐரோப்பிய வரலாற்றிலேயே மிக மோசமான ஒன்…

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் வரலாறு காணாத வகையில் வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாகப் பிரான்சில் மட்டும் இதுவரை சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொதுச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் 20ஆம் திகதி தொடங்கிய இந்த உஷ்ண அலை, ஐரோப்பிய வரலாற்றிலேயே மிக மோசமான ஒன்றாகக் கருதப்படும் நிலையில், மின் உற்பத்திப் பாதிப்பு மற்றும் உள்கட்டமைப்புச் சேதங்கள் எனப் பல நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது.

தற்போதைய முதற்கட்டப் புள்ளிவிவரங்களின்படி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் என்றும், முதியோர் இல்லங்கள் மற்றும் வீடுகளில் நிகழ்ந்த மரணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் திரட்டப்படும் போது இந்த இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.எச்சரிக்கை தற்போது பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் உஷ்ணத்தின் வீரியம் சற்றே குறையத் தொடங்கியுள்ள போதிலும், வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள சில மாவட்டங்களுக்கு இன்னும் வெப்ப அலை எச்சரிக்கை நீடிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்துப் பேசியுள்ள பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட், வானிலை மாற்றமடைந்து வெப்பம் தணிந்த பிறகும் கூட, அதன் பக்கவிளைவுகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் சுமார் 10 நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

உலகளாவிய சராசரியை விட ஐரோப்பாவில் பருவநிலை மாற்றம் மிக அதிவேகமாக நிகழ்ந்து வருவதே இந்த அதீத காலநிலை மாற்றத்திற்குக் காரணம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.