கின்னஸ் சாதனைக்காக அரச சார்பற்ற தனியார் நிறுவனமொன்றிற்கு அரசாங்கத்தின் அனுசரணைய வழங்கிமை மற்றும் சுமார் 5,000 குடும்பங்களிடம் இருந்து தலா 5,000 ரூபாய் வீதம் பெருந்தொகை பணத்தைச் சேகரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு எதிராக விசா…

கின்னஸ் சாதனைக்காக அரச சார்பற்ற தனியார் நிறுவனமொன்றிற்கு அரசாங்கத்தின் அனுசரணைய வழங்கிமை மற்றும் சுமார் 5,000 குடும்பங்களிடம் இருந்து தலா 5,000 ரூபாய் வீதம் பெருந்தொகை பணத்தைச் சேகரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரி ‘ஜன அரகல சன்தானய’ (மக்கள் போராட்ட முன்னணி) இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னிலை சோசலிச கட்சியின் வெகுஜன செயலாளருமான துமிந்த நாகமுவ தெரிவிக்கையில்,

கடந்த ஜூன் 14 ஆம் திகதி, உலகிலேயே அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியப் பயிலரங்கு இலங்கையில் நடத்தப்பட்டதாக அரசாங்கம் பெரிய அளவில் பிரச்சாரங்களை மேற்கொண்டது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி என்ற கின்னஸ் சாதனை இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவே கூறப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களே தலைமை தாங்கியிருந்தார். அவரைத் தவிர, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே நடத்தப்பட்டது.

ஆனால் இப்போது எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால், இந்த நிகழ்வு தொடர்பான கின்னஸ் சான்றிதழில் இலங்கையின் பெயரோ, இலங்கையின் எந்தவொரு அரச நிறுவனத்தின் பெயரோ அல்லது இலங்கையர் ஒருவரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. இந்த கின்னஸ் சான்றிதழின் உரிமை ஒரு இந்திய நிறுவனத்திற்கும், இலங்கையிலுள்ள அதன் கிளை நிறுவனத்திற்குமே வழங்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் எவ்வாறு அரசாங்க அனுசரணையைக் கொடுத்தார் என்பதுதான் எங்களின் முதலாவது கேள்வி.

அடுத்த விடயம், இந்த நிகழ்ச்சியில் சுமார் 5,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களின் குடும்பங்களிடமிருந்து தலா 5,000 ரூபாய் வீதம் பெருமளவிலான பணம் இங்கு வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தற்போது மீண்டும் இந்த பிள்ளைகளிடம் லோகோ (முத்திரை) ஒன்றிற்காக என கூறி, சான்றிதழுக்காக 3,450 ரூபாயும், மற்றுமொரு தேவைக்காக தலா 2,350 ரூபாயும் வசூலிக்க முற்படுகின்றனர். கஷ்ட பிரதேசங்களில் இருந்து தங்களது பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்த பெற்றோர்கள், கடந்த சில நாட்களாக கொழும்பில் தங்கியிருப்பதற்காக பெருந்தொகை பணத்தை செலவழித்துள்ளனர். சில குடும்பங்கள் இதற்காக சுமார் 30,000 ரூபாய் வரை செலவிட்டுள்ளன. ஆனால் இறுதியாக, இவை அனைத்தும் ஒரு இந்திய நிறுவனத்திற்கு கின்னஸ் சாதனையைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு எதிராகவே நாங்கள் நேற்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். இந்த அனைத்து விபரங்களும் அந்த முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எந்த அடிப்படையில் இந்த நிகழ்ச்சிக்கு அரசாங்க அனுசரணை வழங்கப்பட்டது என்பதும், இந்த அப்பாவி பெற்றோர்களிடம் இருந்து திரட்டப்பட்ட பெருந்தொகை பணத்திற்கு என்ன நேர்ந்தது என்பதும் நாட்டுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். ஏனைய முறைப்பாடுகளைப் போலவே லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதிலும் உடனடியாகத் தலையிட்டு, பொறுப்பானவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.