பதுளை மாவட்டத்தில் மஹியங்கணை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ரிதீமாலியத்த - குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந…

பதுளை மாவட்டத்தில் மஹியங்கணை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ரிதீமாலியத்த - குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கண்டி, கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், கண்டி, பூஜாரப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரும் ஆவர்.பிறந்த நாள் கொண்டாட்டம்

கண்டி பகுதியிலிருந்து 33 பேரை கொண்ட குழுவினர் நேற்றுமுன் தினம் லொக்கல்லா ஓயா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விவசாயப் பண்ணை என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த சுற்றுலாத் தலம் ஒன்றிற்கு வருகை தந்துள்ளனர்.பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் ஈடுபட்ட பின்னர், அந்த சுற்றுலாத் தலத்திற்குச் சொந்தமான இரண்டு சிறிய படகுகளை பாதுகாப்பற்ற முறையில் ஒன்றாக இணைத்து கட்டப்பட்ட மிதவைப்படகு மூலம், லொக்கல்லா ஓயா குளத்தின் நடுவிலுள்ள சிறிய தீவொன்றிற்கு நீராடுவதற்காக சென்றுள்ளனர்.

அவர்கள் அந்தத் தீவில் நீராடிவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, அந்த மிதவைப்படகு உடைந்து கவிழ்ந்தமையாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து நடந்த தருணத்தில் இந்த மிதவைப்படகில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.சடலங்கள் மீட்பு

அவர்களில் இருவர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்திருக்காததால் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.பொலிஸாரும் கிராம மக்களும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் மூலம் நேற்று காலை அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மஹியங்கனை பதில் நீதிவான் எஸ்.கோவின்ன நேற்று மதியம் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, சடலங்கள் இரண்டையும் மஹியங்கனை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ரிதீமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.