பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையில் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (02) யாழ்ப்பாணம், கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப்…

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையில் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (02) யாழ்ப்பாணம், கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

அரசின் ‘சிசு செரிய’ திட்டத்தின் கீழ் இயங்கும் இந்தப் பேருந்துச் சேவையில், மாணவர்களிடம் அரைவாசி பயணக் கட்டணம் மட்டுமே அறவிடப்படுவதுடன், மீதமுள்ள தொகையை அரசாங்கம் மானியமாக வழங்குகிறது.

தற்போது உசன் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை நோக்கி இயக்கப்படும் இரண்டு தனியார் பேருந்துகள் இந்த சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த சேவையின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான டிஜிட்டல் அட்டை வழங்கப்படுகிறது. மாணவர் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் அந்த அட்டையை மின்னணு கருவியில் பதிவு செய்தவுடன், அதற்கான நேரம் உள்ளிட்ட தகவல்கள் பெற்றோரின் கைத்தொலைபேசிக்கு உடனடியாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

இதன் மூலம் மாணவர்கள் பாதுகாப்பாக பாடசாலைக்குச் செல்வதையும் வீடு திரும்புவதையும் பெற்றோர் நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த டிஜிட்டல் வசதியை, சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர் தனது சொந்த நிதியில் நடைமுறைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு ‘சிசு செரிய’ சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் இன்று இரண்டு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் மேலும் பல பகுதிகளுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.