மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் வெளிப்புற பொருளாதாரச் சவால்கள் காரணமாக மக்களுக்கு எதிர்பார்த்த அளவு நிவாரணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், சூழ்நிலை சீரடைந்தவுடன் மேலும் பல நிவாரணங்களை வழங்க அரசு தயாராக இருக்கின்றது என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசி…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் வெளிப்புற பொருளாதாரச் சவால்கள் காரணமாக மக்களுக்கு எதிர்பார்த்த அளவு நிவாரணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், சூழ்நிலை சீரடைந்தவுடன் மேலும் பல நிவாரணங்களை வழங்க அரசு தயாராக இருக்கின்றது என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (05.07.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், பொருளாதார ரீதியாக முற்றிலும் வீழ்ச்சியடைந்திருந்த ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். அந்தச் சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகத் திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகின்றோம். நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.விலை குறைப்பு கடந்த 2024 செப்டெம்பர் மாதம் நாம் ஆட்சியைப் பொறுப்பேற்றதிலிருந்து பெட்ரோல் விலையை 50 ரூபாவுக்கும் அதிகமாகக் குறைத்தோம். டீசல் விலையும் குறைக்கப்பட்டது. அத்துடன் பருப்பு, அரிசி, முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளையும் படிப்படியாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், நாடு மீண்டு வரத் தொடங்கிய தருணத்தில் இயற்கை அனர்த்தங்களையும், கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் நீடித்து வரும் மத்திய கிழக்கு போரின் தாக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த உலகளாவிய நெருக்கடிகள் இல்லாதிருந்தால் மக்களுக்கு இன்னும் அதிகமான நிவாரணங்களை வழங்கியிருக்க முடியும்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், தற்போது நாட்டில் பயன்படுத்தப்படுவது முன்னர் அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளாகும். எனவே, உலக சந்தையில் விலை குறைந்தவுடனேயே உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது. இருந்தபோதிலும், கடந்த 29ஆம் திகதி முதல் எரிபொருள் விலைகள் ஓரளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளன.பொருளாதாரத்தில் நேரடி தாக்கம் மத்திய கிழக்கு போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை எவராலும் துல்லியமாகக் கணிக்க முடியாதுள்ளது. இந்தப் போர் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்திலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மக்களின் கஷ்டங்களை அரசு நன்கு புரிந்துகொண்டுள்ளது. எனவே, உலகளாவிய சூழ்நிலை சீரடைந்தவுடன் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, அரச சேவையாளர்களுக்குச் சதொச நிறுவனம் ஊடாக அரிசி வழங்கும் திட்டம் தொடர்பாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்துகள் சிலரால் திட்டமிட்டுத் திரித்துக் கூறப்படுகின்றன. அரச ஊழியர்களுக்குச் சலுகை அடிப்படையில் அரிசியைப் பெற்றுக்கொடுக்கும் முறையான நடைமுறையொன்றை உருவாக்குவதே அந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கமாகும்.
மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்து, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் என்றார்.

