நாட்டில் தற்போதைய டெங்கு அதி-தொற்று நிலைமை இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஆரம்பத்தில் டெங்கு பரவல் அதிகமாகக் காணப்பட்ட பகுதிகளில் தற்போது தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாலும், புதிய பகுதிகள…

நாட்டில் தற்போதைய டெங்கு அதி-தொற்று நிலைமை இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஆரம்பத்தில் டெங்கு பரவல் அதிகமாகக் காணப்பட்ட பகுதிகளில் தற்போது தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாலும், புதிய பகுதிகளில் டெங்கு வேகமாகப் பரவி வருவதாக அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். வானிலை மாற்றங்கள்

தற்போது நிலவும் வானிலை மாற்றங்கள் காரணமாக சில பகுதிகளில் மெல்லிய மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொசுக்களின் அடர்த்தி மேலும் அதிகரித்து, டெங்கு பரவல் தீவிரமடையும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் காட்டிவந்த ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை எந்தவொரு காரணத்திற்காகவும் குறைத்துக்கொள்ளக் கூடாது என உபுல் ரோஹண பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் டெங்கு ஒழிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்குப் பிரதான தடையாக இருப்பது உரிமையாளர்கள் இல்லாத வெற்று வீடுகள் மற்றும் காணிகள் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வீடுகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதால் பூட்டப்பட்டுக் கிடக்கும் வீடுகள்.மற்றும் நகர்ப்புறங்களில் காணிகளையும் வீடுகளையும் கொள்வனவு செய்துவிட்டு, எவரும் குடியேறாமல் கைவிடப்பட்டுள்ள இடங்கள் போன்ற இடங்களில் தேங்கும் நீர் நிலைகளே கொசுக்கள் பெருகுவதற்குப் பிரதான காரணங்களாக அமைந்து, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.