சட்டவிரோத மதுபான விற்பனையாளர் ஒருவரின் வீட்டை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது, அந்த நபரின் மனைவி நாய்களை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அங்கும்புருவத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நால்வர் காயமட…
சட்டவிரோத மதுபான விற்பனையாளர் ஒருவரின் வீட்டை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது, அந்த நபரின் மனைவி நாய்களை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அங்கும்புருவத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
அங்கும்புருவத்தோட்ட பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சட்டவிரோத மதுபான விற்பனையாளர் ஒருவரின் வீட்டைப் பொலிஸார் முற்றுகையிட்டனர். பொலிஸாரைக் கண்டதும் ஆத்திரமடைந்த அந்த நபரின் மனைவி, அவர்களைத் தாக்க முற்பட்டதுடன், வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த எட்டு நாய்களை பொலிஸார் மீது ஏவிவிட்டுள்ளார்.
நாய்களின் தாக்குதலுக்கு இலக்கான அங்கும்புருவத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் அஸங்க ராஜகருண மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (96625) மனோஜ் ஆகியோர் பலத்த காயங்களுடன் களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் பரிசோதகர் சுதீர மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (83935) கிரிஷாந்த ஆகியோரும் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சந்தேக நபரின் வீட்டிலிருந்து 1000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த குற்றத்திற்காக விற்பனையாளரும், கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவரது மனைவியும் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

