நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டிருப்பது போன்று 3 மாதங்களுக்குள் நிறைவேற வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கர…
நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டிருப்பது போன்று 3 மாதங்களுக்குள் நிறைவேற வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானப் பணி விரைவில் ஆரம்பம்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நெடுந்தீவின் இருப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு மானசீகமாக உழைத்து வருகின்ற தரப்பு என்ற அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை அமைப்பதற்கு தீர்மானித்து அதற்கான அடிக்கல் நாட்டியிருப்பதனை வரவேற்கின்றோம். இதேபோன்று, கடந்த வருடம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைத்தானத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
ஆனால், அது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தற்போது இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகம் அறிவித்திருக்கின்றமை துரதிஸ்டவசமானது.
அது எமக்கும் எமது மக்களுக்கும் ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது. அதுபோன்று நெடுந்தீவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணிகளும் இடைநடுவில் கைவிடப்படாமல் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதனை விட, தீவகத்தில் இன்னும் பல்வேறு தேவைகள் காணப்படுகின்ற நிலையில் அவை தொடர்பாகவும் இந்த அரசாங்கம் கரிசனை செலுத்த வேண்டும்.
சிறு சிறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு குறிப்பாக, நெடுந்தீவில் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில், எம்மால் உருவாக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை மேலும் விஸ்தரித்து அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.
அதேபோன்று வைத்தியசாலைக்கு தேவையான குடிநீர் சீரான முறையில் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், கடந்த காலங்களில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட பனை நடுகை திட்டத்தில் நடப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் பெரிய மரங்களாக வளர்ந்துள்ள போதிலும் பனை அபிவிருத்தி சபையின் சீரான பராமரிப்பு இன்று இருக்கின்ற நிலையில் அவை தொடர்பாக கரிசனை செலுத்தி, பனை வளத்தினை பெருக்க வேண்டும்.
மேலும் நெடுந்தீவின் கிழக்கு பகுதி கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றமையினால் அதனை தடுத்து நிறுத்தி, எம்மால் பாதுகாக்கப்ட்ட அந்த தீவு தேசத்தினை பாதுகாக்க வேண்டிய அவசர கட்டுப்பாடு தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
இவ்வாறு அடையாளம் காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளும் இந்த அரசாங்கத்தினால் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மக்களினதும் எமதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றார்.

