Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு குழுக்களுக்கிடையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.அவர்களில் 07 பேர் அதிகாரிகளாவர்.இந்த மோதலில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொழும்பு த…

Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு குழுக்களுக்கிடையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.அவர்களில் 07 பேர் அதிகாரிகளாவர்.இந்த மோதலில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொழும்பு தேசிய வைத்தியசாலை, ராகமை போதனா வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சிறைச்சாலையில் நேற்று(05) இரு கைதிகள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்ததை அடுத்து, இன்றும் அமைதியின்மை ஏற்பட்டது.நேற்றிரவு வரை காணப்பட்ட அமைதியற்ற நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இன்று முற்பகல் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது.அதிகாரிகள் சிலர் கைதிகளுக்கு காலை உணவை வழங்குவதற்காக உட்சென்ற போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.இதன்போது கைதிகள் அதிகாரிகள் மீது கல்வீச்சு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.காயமடைந்த அதிகாரிகளையும் கைதிகளையும் வௌியே கொண்டுவருவதற்கு பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து கருத்து தெரிவித்த சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க, தாக்குதலுக்குள்ளான அதிகாரிகள் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு வந்தபோது, அவர்கள் பின்னால் துரத்தி வந்து அதிகாரிகளை தாக்கியதாகக் கூறினார்.இந்நிலையில் அவர்கள் நுழைவாயிலை உடைக்க முயற்சித்துள்ளதுடன், அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த அதிகாரிகள் அவர்கள் சிறைச்சாலையின் நுழைவாயிலை உடைப்பதைத் தடுப்பதற்காக கைதிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.இதன்போது மீண்டும் ஒருமுறை அங்கு சென்ற சிறைச்சாலை அதிகாரிகள் மீது பெருமளவிலானோர் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.அந்த சந்தர்ப்பத்தில் ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள் உதவியுடன் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்து இதனை கட்டுப்படுத்த முயற்சித்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாகப் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலைப் பாதுகாப்பதற்கு பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியேற்பட்டது.கைதிகளின் உறவினர்கள் ஒன்றுதிரண்டு அமைதியற்ற முறையில் நடந்துகொண்டதால் நிலைமை மேலும் நெருக்கடியாக மாறியது.  நிலைமை மேலும் தீவிரமடைந்ததையடுத்து, விமானப்படையின் உதவியைப் பெற்று நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக Bell 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் விமானப்படையின் ட்ரோன்கள்(Drone) பயன்படுத்தப்பட்டன.  அதன்பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் சிறைச்சாலை அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நுழைந்தனர்.நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததுடன், மேலும் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தனர்.அதன் பின்னரே நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்திலும் அவர்களின் உறவினர்கள் தலையிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.இன்று பிற்பகல் வேளையில் இராணுவத்தினரும் நீர்கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டனர்.தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவளிக்கும் குழு மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கு இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சுரேஷ் புஷ்பகுமார எனப்படும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபரே இந்த மோதலை வழிநடத்தியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.அவர் சிறைச்சாலைக்குள் இருந்து முன்னெடுத்த இரகசிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மற்றுமொரு கைதிகள் குழுவினர் தகவல் வழங்கியதாகக் கூறி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையே இந்த மோதலின் ஆரம்பமாகும்.அவர் தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'பூரு மூணா' எனப்படும் வர்ண ரங்க என்ற குற்றவாளியின் நெருங்கிய நபரெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.'பூரு மூணா' பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபராவார். கட்டுவெல்லே கொட சுரேஷ் புஷ்பகுமார எனப்படும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர், நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிற்காக தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று பிற்பகல் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.