தற்போதைய அரசாங்கம் நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயமாக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க இந்த விடயத்தை தெர…

தற்போதைய அரசாங்கம் நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயமாக்க முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புகளில் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் 65 வயதிலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் 63 வயதிலும் ஓய்வு பெற வேண்டும். எனினும், தற்போதைய அரசாங்கம் இந்த நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கத் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது இது குறித்து எதனையும் கூறவில்லை என தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின்படி, பிரதம நீதியரசருடன் சேர்த்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11 லிருந்து 19 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12 லிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த சில மாதங்களில் நீதிபதிகள் வெற்றிடங்கள் 8 ஏற்பட்டுள்ளன. இந்த வெற்றிடங்களுக்கான பெயர்களை ஜனாதிபதி இன்னும் பரிந்துரைக்கவில்லை. பெயர்களை அனுப்புமாறு அரசியலமைப்பு சபையும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் பிரதம நீதியரசர் ஓய்வு பெற வேண்டும். ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதாயின் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டும் ஏன் அதிகரிக்க வேண்டும்? நாட்டின் ஏனைய நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், வைத்தியர்கள் மற்றும் அரச சேவையின் உயர் அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதும் அதிகரிக்கப்பட வேண்டும் அல்லவா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசாங்கத்தின் 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' கொள்கைப் பிரகடனத்தில் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது பற்றி 16 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், பிரதம நீதியரசரின் வயதை அதிகரிப்பது பற்றி அதில் எங்கும் கூறப்படவில்லை. இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகக் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. அதுவே நடக்க வேண்டும், ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதனைச் செய்யவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். பிரம நீதியரசர் ஓய்வு பெற்ற பின் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு வீழ்ந்துவிடாது. ஆனால், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதானது நீதிமன்றத்தின் மீது நேரடிப் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நீதித்துறை கட்டமைப்பு அரசியல்மயமாக்கப்பட்டு வருவதாகவே தெரிகிறது. பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கே உள்ளது. இத்தருணத்தில் நாட்டின் சிவில் அமைப்புகள், சட்டத்தரணிகள் சங்கம், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அவரது ஆட்சிக்கு பாதகமாகவே அமையும். மக்கள் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளவற்றைச் செய்வதற்கே ஆகும். அரசியலமைப்பைத் திருத்தி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். ஜனாதிபதியும் அரசாங்கமும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கு ஏற்படுத்தும் இந்த பாதிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும், அதன் சட்டத்தரணிகள் சங்கமும் தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் எடுக்கும்" என நிரோஷன் பாதுக்க குற்றம் சுமத்தியுள்ளார்.