ராம் சரணின் சமீபத்திய வெளியீடான ‘பெட்டி’ திரைப்படம், அதன் கதைக்களம் அல்லது உருவாக்கத்திற்காக அல்லாமல், கதாநாயகி ஜான்வி கபூரை மிகைப்படுத்தப்பட்ட கவர்ச்சியுடன் காட்டியதற்காகச் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா இதற்கு மன்னிப்பு கோரியதுடன், ஆட்சேபனைக்குரி…
ராம் சரணின் சமீபத்திய வெளியீடான ‘பெட்டி’ திரைப்படம், அதன் கதைக்களம் அல்லது உருவாக்கத்திற்காக அல்லாமல், கதாநாயகி ஜான்வி கபூரை மிகைப்படுத்தப்பட்ட கவர்ச்சியுடன் காட்டியதற்காகச் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா இதற்கு மன்னிப்பு கோரியதுடன், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், படப்பிடிப்பின் போது ஜான்வி ஏன் இதைக் கண்டிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், ஜான்வியின் ஒப்பனையாளர் (Make-up artist) அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
‘பெட்டி’ படத்தில் ஜான்வியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், அவரது ஒப்பனையாளர் சவ்லீன் கவுர் மன்சந்தா, நடிகைக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் கதையில் பதிவிட்டுள்ள அவர், "நடிகைகள் ஏற்கும் கதாபாத்திரங்களை வைத்து அவர்களைக் குற்றம் சாட்டுவது எளிது, ஆனால் உண்மை நிலை வேறானது. ஜான்வி கபூர் படப்பிடிப்பு மற்றும் பிந்தைய தயாரிப்பு பணிகளின் போது இக்காட்சிகள் குறித்து வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியுள்ளார் என்பதுதான் உண்மை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜான்வி குறிப்பிட்ட கேமரா கோணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவர் ஒரு தொழில்முறை எல்லைக்கோடு வரைந்தும், இயக்குநர் அதனை மீறி இறுதிக் காட்சியில் அவற்றைச் சேர்த்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். "இது நடிகை தனக்காகக் குரல் கொடுக்கத் தவறியதல்ல; ஒரு இயக்குநர் நடிகையின் சம்மதத்தை விட பாக்ஸ் ஆபீஸ் வசூலே முக்கியம் என்று கருதி, அவரது எல்லைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டது" என்றும் சவ்லீன் பதிவிட்டுள்ளார்.
ஜான்வி கபூரின் உரையாடல் அடங்கிய மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதில், தான் படமாக்கப்பட்ட விதம் குறித்து அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ள உரையாடல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 30 திகதியிட்ட அந்தச் ஸ்கிரீன்ஷாட்டில், "நான் அவரிடம் மார்பு மற்றும் இடுப்புப் பகுதிகளைக் காட்டும் கோணங்களில் படமெடுக்க வேண்டாம் என்று கூறினேன். ராம் சார் மிகவும் கனிவானவர், அவரும் இயக்குநரிடம் சத்தமிட்டு, இனிமேல் இதுபோன்ற கோணங்களில் அவரைப் படமெடுக்கக் கூடாது என்று கூறினார்" என்று ஜான்வி குறிப்பிட்டுள்ளார். இது குறித்த விமர்சனங்களுக்கு நடிகர் ராம் சரண் இதுவரை பகிரங்கமாகப் பதிலளிக்கவில்லை.
படம் வெளியானதில் இருந்து, ஜான்வியின் கதாபாத்திரமான 'அச்சியம்மா' அறிமுகமாகும் விதம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கதாபாத்திரத்தை வலுப்படுத்துவதை விட, அவரது உடல் அமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், அச்சியம்மாவிற்கு விருப்பம் இல்லாத நிலையில், கதாநாயகன் அவரிடம் நெருக்கம் காட்ட விரும்புவது மற்றும் மின்சாரம் இல்லாத வேளையில் அவர் சம்மதமின்றி முத்தமிடுவது போன்ற காட்சிகள் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளன.

