சிறையில் பிடிபட்டாலும் கூட எனது சீற்றம் குறையவில்லை என்பதைக் கூறக்கூடிய விதத்தில் சிலர் செயற்படுகின்றனர் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநே…

சிறையில் பிடிபட்டாலும் கூட எனது சீற்றம் குறையவில்லை என்பதைக் கூறக்கூடிய விதத்தில் சிலர் செயற்படுகின்றனர் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பிள்ளையான் செய்த குற்றங்கள் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உண்மையில் இந்த விடயம் நீதிமன்ற விசாரணையின் போது உண்மைகள் கட்டாயம் வெளிவரும். கடந்த காலத்தில் உண்மையில் தெரியவேண்டும், குற்றவாளிகளை பாதுகாக்கின்ற ஒரு செயல்பாடுகள் காணப்பட்டன.

பலர் எங்களுடைய மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் உங்களுக்குத் தெரியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், ஊடகவியலாளர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பலரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த வேளையில் கொலை செய்யப்பட்ட போது இங்கு இருந்த அரசாங்கம், ராஜபக்ச அரசாங்கம் இருந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அவருடைய ஆட்சிக் காலத்தில் 43-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அந்த வேளையில் பிள்ளையானும் அவர்களோடு சேர்ந்து செயல்பட்ட ஒருவராக இருக்கின்றார்.

அரசியல் தலைவர்களின் கொலை விவகாரம் எனவே, கடந்த காலத்திலும் ஜோசப் பரராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் கொலை சம்பந்தமான விசாரணை நடைபெற்றது. ஆட்சி மாற்றத்தின் போது அவர் வெளியில் வந்திருக்கின்றார்.மீண்டும் பல குற்றச்செயல்கள் அவர் தலையில் சுமத்தப்பட்டிருக்கின்றது.

குறிப்பாகச் சொல்லப் போனால், அவரோடு இருந்த சகாக்கள் கூட இவர் மீது குற்றங்களைச் சுமத்துகின்ற அரசு சாட்சியங்களாகவும் மாறியிருக்கின்றார்கள்.

எனவே, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டு இருக்கின்றன. ஆகவே, இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவரும் பொறுப்பு என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகின்றது.

இந்த குற்றப்புலனாய்வு விசாரணைகளின் போது பேசப்படுகின்றது, ஊடகங்களில் பேசப்படுகின்றது, சமூக செயல்பாட்டாளர்கள் கூட இதைச் சொல்லுகின்றார்கள்.

ஆகவே, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது பொய்யானது என்பதை நீதிமன்றங்கள் நிச்சயமாக உறுதி செய்யும். அந்த நீதிமன்றத்தின் மூலமாக எது பொய், எது போலியானது என்பது வெளிவரும். ஏனென்றால், இப்போது விசாரணையை மேற்கொண்டு இருக்கின்ற சாணி அபேசேகர உண்மையில் அவர், கடந்த காலத்திலும் கூட நேர்மையாக அவர் விசாரணைகளை மேற்கொண்டதாக அறியப்படுகின்றது. அவரை அதன் பின்னர் கோட்டபாய காலத்தில் கைது செய்துள்ளனர்.

பிள்ளையானின் ரகசிய முகாம் இப்போது அவர், பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார். இது பொய்யல்ல, போலியல்ல. ஆகவே, இந்த விடயங்கள் உண்மையாக வந்து கொண்டிருக்கின்றன.எங்களுக்கும், நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கடந்த காலத்தில் இந்த கொலைகள், கடத்தல்கள், கப்பங்கள், பணம் பறித்தல் போன்ற செயல்பாடுகள் நடக்கும் போது யார் யார் இந்த ஆயுதங்களோடு செயல்பட்டார்கள், எங்கெங்கு முகாம் வைத்திருந்தார்கள் என்ற விடயமெல்லாம் தெரியும்.

இப்போது ரவீந்திரநாத் பேராசிரியர் கொல்லப்பட்டிருக்கின்றார், கல்வியலாளர் தம்பையா கொல்லப்பட்டிருக்கின்றார், இவ்வாறு சொல்லலாம், அருட்தந்தையர், குருக்கள்மார் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், எல்லோரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த காலத்துல ஆயுதங்களை ஏந்திக்கொண்டு அட்டகாசமாக தீவுச்சனையிலும் கூட முகாமை வைத்துக் கொண்டு செயல்பட்டவர்கள் யார் என்பது இப்போது புலனாய்வு விசாரணையின் போது வந்து கொண்டிருக்கின்றது.

சுரேஷ் சலேவின் மடிக்கணினியின் பாஸ்வேர்ட் எனவே, பிள்ளையான் குற்றவாளி இல்லையென்றால், நிரபராதி என்றால், நிரபராதி என்றால் அவர் தப்பித்து வரலாம், விசாரணைக்கு முகம் கொடுக்கலாம். அதேபோன்று சுரேஷ் சலே உண்ணாவிரதம் இருக்கின்றார், வாக்குமூலம் கொடுக்காமல் உண்ணாவிரதம் இருக்கின்றார். மடிக்கணினியில் காணப்படுகின்ற அந்த பாஸ்வேர்ட் , தொலைபேசியின் பாஸ்வேர்ட் போன்றவற்றை அவர் கொடுக்கவில்லை.

ஆகவே, குற்றம் செய்யவில்லை என்றால், மடியில் கனமில்லை என்றால், கனமில்லை என்றால் வழியில் பயமில்லை.இவர்கள் வெளிப்படையாகச் சொல்லி வெளிவரலாம். ஆகவே, போலிக் குற்றம், பொய்க் குற்றச்சாட்டு, ஜனாதிபதியைப் பற்றிய விமர்சனமெல்லாம் ஒரு அறிவுப்பூர்வமான, அர்த்தமுள்ள விமர்சனம் போன்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு, ஆதரவாளர்களை முறுக்கேற்றுவதற்கு அல்லது தான் சிறையில் பிடிபட்டாலும் கூட எனது சீற்றம் குறையவில்லை என்பதைக் கூறக்கூடிய விதத்தில் அவர் செயல்படுகின்றார்.

எங்களைப் பொறுத்தமட்டில் நீதி விசாரணை வருகின்ற போது உண்மைகள் வெளிவரும். அதன் போது இது போலியா, உண்மையா என்பதை நாங்கள் புரிந்து கொள்வோம். ஆனால், எங்களுக்கும் மனச்சாட்சி இருக்கின்றது. நாங்களும் இதனை அறிந்து கொள்கின்றோம், உண்மைகள் எங்களுக்கு ஓரளவு விளங்குகின்றது.

செம்மணி மனித புதைகுழியில் 400 என்புத் தொகுதிகள் மீட்பு இப்போது செம்மணி புதைகுழி அகழ்ப்படுகின்றது. 600-க்கும் மேற்பட்டவர்கள் புதைக்கப்பட்டவர்கள் என்று சோமரத்ன ராஜபக்ச சொல்லியிருந்தார். தற்போது பார்த்தால் 400-க்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் வந்திருக்கின்றது.

ஆகவே, சோமரத்ன ராஜபக்ச இந்த கொலையோடு சம்பந்தப்பட்ட சோமரத்ன ராஜபக்ச சொன்ன விடயம், 30 வருடங்களின் பின்னர் இப்போது நிஜமாகிக் கொண்டிருக்கின்றது.

எனவே, இந்த விசாரணையிலே எங்களுக்கு ஓரளவுக்கு உண்மை வெளியில் வந்திருக்கின்றது. ஆனால், இந்த உண்மை வெளிவந்தால் மட்டும் போதாது, கொல்லப்பட்டவர்கள் யார் என்பது மரபணு சோதனையின் மூலமாக கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

அதேபோன்று கொலை செய்தவர்கள் யார் என்பதும் கண்டுபிடிக்கப்பட வேண்டும், அவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். இவையெல்லாம் செய்தால்தான் நாங்கள் முழுமையாக நம்பிக்கை அடையலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஆனால், தற்போது 400-க்கும் மேற்பட்ட என்புக் கூடுகள் வெளியில் வந்திருக்கின்றது. 30 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் மூடி மறைத்த அந்த உண்மைகள் வெளியில் வந்திருக்கின்றது. ஆகவே, இதனை வரவேற்கின்றோம்.

ஆனால், இன்னும் உங்களுடைய முன்னேற்றமான செயல்பாட்டை எதிர்பார்க்கின்றோம். கொல்லப்பட்டவர்கள் யார், யார் கொன்றார்கள், அவர்களுக்கான நீதி என்ன, அவர்களுக்குரிய நியாயமான இழப்பீடு என்ன, மீள நிகழாமல் இருப்பதற்குரிய அரசியல் தீர்வு என்ன என்பதைப் பற்றி எல்லாம் கூறினால் தான் நாங்கள் முழுமையான நம்பிக்கை கொள்வோம். அதுவரை, நீங்கள் செய்த விடயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விடயத்தில், அந்த 'பப்பா' என்று சொல்லப்படுகின்ற சூத்திரதாரி, மற்றது 'சொனிக்' என்று சொல்லப்படுகின்ற சூத்திரதாரி கைது செய்யப்பட்டு உள்ளுக்கு இருக்கின்றார். இப்போது, இன்னொருவர் 'அல்பா' என்று சொல்லப்படுகின்ற பெரிய குற்றவாளி இருக்கின்றார், அவரும் கைது செய்யப்பட இருப்பதாக அறிகின்றோம். அவருக்கு பயணத்தடை விதித்திருப்பதாக அறிகின்றோம். அவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் தான் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறிய முடியும்.

ஆகவே, இந்த கடந்த அரசாங்கங்களோடு ஒப்பிடுகின்ற போது, ஓரளவுக்கு இந்த அரசாங்கம் இந்த விசாரணைகளில் முன்னேற்றத்தைக் காட்டினாலும், அவர்களுக்கு பௌத்த சிங்கள மேலாதிக்க குருமார்களின் அழுத்தங்கள் இருக்கின்றமையினால் இவர்கள் எந்த அளவுக்கு இந்த உண்மைகளைக் கண்டறிவார்கள் என்பது தெரியவில்லை. இதனால் தான் நாங்கள் சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம் என்றார்.