(நா.தனுஜா) சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிக மோசமான, மனிதத் தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகள், அப்பிரகடனத்தை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமென 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியு…

(நா.தனுஜா) சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிக மோசமான, மனிதத் தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகள், அப்பிரகடனத்தை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமென 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய நிலையம், பாதுகாப்பு பொறுப்புக்கான உலகளாவிய நிலையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், நியூ லைன்ஸ் கற்கைகள் நிலையம், இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு, சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் மூலோபாய தர்க்கித்தல் செயற்திட்டம் ஆகிய 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை இந்தப் பிரகடனத்தை 1994ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. இருப்பினும் அதற்கு முன்பதாக 1979 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசு தனிநபர்களை பலவந்தமாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும், வலிந்து காணாமலாக்குவதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது. இச்சட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் பெருமளவுக்கு இலக்குவைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் மிகமோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் பாலியல் வன்முறைகளுக்கும், வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு உண்மையில் என்ன நேர்ந்தது என்பதை தொடர்ந்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் மறைத்துவருவதன் காரணமாக, அவர்களது குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மைகளை இன்னமும் அறியாமல் இருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின் பிரகாரம், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு அவசியமான உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறுவுதை இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே தடுத்தது என நம்பகரமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் சித்திரவதைகள் அல்லது ஏனைய மிகமோசமான மீறல்களுக்குச் சமனானவையாகும். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2016 ஆம் ஆண்டு சித்திரவதைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில், 'நபரொருவர் கைதுசெய்யப்படுவதற்கான காரணமாக சந்தேகிக்கப்படும் குற்றத்தின் தன்மையைப் பொருட்படுத்தாமல், நாட்டின் சகல பாகங்களிலும் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமானது கடந்த 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பாக வடக்கில் தமிழர்களுக்கு எதிராகப் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் ஏனைய மோசமான நடாத்துகைகள் என்பன தொடர்பான குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்துள்ளது. அதுமாத்திரமன்றி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டிருந்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்களுக்கும் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இவற்றுக்கு மேலாக இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு அரசாங்கத்தின் கீழும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. உதாரணமாக தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மே மாதம், இறுதிக்கட்டப் போரின்போது சகல சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டதாகப் பொய்யான கருத்தொன்றை வெளிப்படுத்தியது. இந்த தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கானது தடுப்புக்காவலின் கீழான சித்திரவதைச் சம்பவங்கள் தீவிரமடைவதற்கு வழிகோலுகிறது. இக்குற்றங்களைப் பொறுத்தமட்டில் உள்ளக நீதிப்பொறிமுறையில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில், சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரே தெரிவாக இருக்கிறது. இலங்கை ரோம் சாசனத்தில் கையெழுத்திடாத காரணத்தினால், இலங்கையுடன் தொடர்புடைய விவகாரங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பெல்லை வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிகமோசமான, மனிதத்தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள், அப்பிரகடனத்தின் வரைமுறைகளை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக அந்தப் பிரகடனத்தின் 30 ஆவது உறுப்புரையைப் பிரயோகிக்குமாறு வலியுறுத்துகிறோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.