சுவிட்சர்லாந்தின் சூர் (Chur) நகரில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகள் தங்கியிருந்த முகாமில் நடத்தப்பட்ட கொடூரமான தீ வைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு தமிழ் அகதிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், அங்குள்ள ஒரு முக்கியப் பாதைக்கு ஜெர்மன் மற்றும் தமிழ் மொழிகளில் பெயர் சூட்ட…
சுவிட்சர்லாந்தின் சூர் (Chur) நகரில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகள் தங்கியிருந்த முகாமில் நடத்தப்பட்ட கொடூரமான தீ வைப்புத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு தமிழ் அகதிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், அங்குள்ள ஒரு முக்கியப் பாதைக்கு ஜெர்மன் மற்றும் தமிழ் மொழிகளில் பெயர் சூட்டப்பட்டுள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .கடந்த 1989-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் தேதி, சூர் (Chur) மாநிலத்தில் உள்ள தமிழ் அகதிகள் முகாம் மீது இனவெறி கலந்த தீவைப்புத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த அநீதியான தாக்குதலில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த நான்கு இளம் தமிழர்கள் தீக்கிரையாகி பரிதாபமாக உயிரிழந்தனர்.தமிழ் அகதிகள் முகாம் மீது இனவெறி கலந்த தீவைப்புத் தாக்குதல்
தாக்குதலில் கந்தையா பாலமுரளி,கந்தையா பாலமுகுந்தன்,சத்திவேல் தம்பிராஜா, தேவராஜா சின்னத்தம்பி, ஆகியோரே இதன்போது உயிரிழந்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் நினைவை என்றென்றும் நிலைநிறுத்தவும், பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கான சமூக நீதியை நிலைநாட்டவும் சூர் (Chur) நகராட்சி நிர்வாகம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அங்குள்ள சாலைப் பார்சல் எண் 6803-இல் (Parcel No: 6803) இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்த ஒரு புதிய பாதைக்கு, இந்த நான்கு தியாகிகளின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கிரவுண்டன் தமிழ் கலாசார மன்றத்தின் (Tamilischer Kulturverein Graubünden) ஆலோசனைகள் மற்றும் முழுமையான ஒத்துழைப்புடன் இந்தத் தனித்துவமான பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இப்பாதைக்கு ஜெர்மன் மொழியில் “Vier-Lichter-Weg” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தமிழ்ப் பொருள் “நான்கு விளக்குகள் கொண்ட பாதை” (நான்கு விளக்கு வீதி) என்பதாகும். உயிரிழந்த நான்கு தமிழர்களின் ஆன்மாவை ஒளிரும் விளக்குகளாக உருவகித்து இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் மதிப்பளித்து, அந்நாட்டு அரசாங்கமே வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டியுள்ள இந்த நிகழ்வு, சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

