கிளிநொச்சி பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கையின் போது, 30-க்கும் அதிகமான அதிவேக மோட்டார் சைக்கிள்களும், 20-க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படு…

கிளிநொச்சி பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கையின் போது, 30-க்கும் அதிகமான அதிவேக மோட்டார் சைக்கிள்களும், 20-க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்து விதிமீறல்கள்

வீதி விபத்துகளை குறைத்து, பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் இலக்கத் தகடுகள் இல்லாமை, உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்குதல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்குகின்றன.இதனையடுத்து குறித்த வாகனங்கள் அனைத்தும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற விதிமீறல்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், இனிவரும் காலங்களிலும் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 20-க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.