ஈராக் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலியா நாசிஃப் (Alia Nassif) மற்றும் அவரது மகனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, அவர்களின் வீட்டில் இருந்து 20 பில்லியன் ஈராக் தினார் (சுமார் 15.5 மில்லியன் டொலர்) மற்றும் பெருமளவிலான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. நாசிஃபின் மகன், முன்னா…
ஈராக் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலியா நாசிஃப் (Alia Nassif) மற்றும் அவரது மகனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, அவர்களின் வீட்டில் இருந்து 20 பில்லியன் ஈராக் தினார் (சுமார் 15.5 மில்லியன் டொலர்) மற்றும் பெருமளவிலான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. நாசிஃபின் மகன், முன்னாள் பிரதமர் முகம்மது ஷியா அல்-சுதானியின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கைது நடவடிக்கைகள், ஈராக்கில் மூத்த அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான ஊழல் ஒழிப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், ஈராக்கின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் உயரடுக்கு படையினர், பாக்தாத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமான ‘கிரீன் சோனில்’ (Green Zone) ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டனர்.
மே மாதம் பதவியேற்ற பிரதமர் அலி அல்-சைதி (Ali Al Zaidi), வேரூன்றிய ஊழல் வலைப்பின்னல்களைக் களைவேன் என உறுதியளித்திருந்தார். அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் விரிவான பிரச்சாரத்தின் முதற்கட்டமாகவே இந்தச் சோதனைகள் அமைந்தன என்று பாதுகாப்பு மற்றும் சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் மூலம், சந்தேக நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 85 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துகள், பெருந்தொகையான ஈராக் தினார்கள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் மேலும் பல கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் மே மாத இறுதியில் கைது செய்யப்பட்ட முன்னாள் பெட்ரோலிய பிரதி அமைச்சர் அட்னான் அல்-ஜுமைலியிடம் (Adnan Al Jumaili) பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த ஞாயிற்றுக்கிழமை கைதுகள் இடம்பெற்றுள்ளதாக ஈராக் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்டவிலக்குரிமை (Immunity) நீக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலும், விசாரணையின் போது பெயர்கள் அடிபட்ட அரச அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சில சந்தேக நபர்கள் தப்பி ஓடியதையடுத்து, கிரீன் சோனின் நுழைவாயில்கள் மூடப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் ஈராக்கின் மிகப்பெரிய ஊழல் ஒழிப்பு விசாரணைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நடவடிக்கையில், கடந்த சில நாட்களில் மட்டும் 107 மில்லியன் டொலருக்கும் அதிகமான அரசு நிதி மீட்கப்பட்டுள்ளதாக ஈராக் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றக் கவுன்சில் தெரிவித்த தகவலின்படி, வீடுகளுக்கு அடியில் ஆழமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 98 பில்லியன் ஈராக் தினார்கள் மற்றும் 11 மில்லியன் டொலர் ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளது; சில இடங்களை அகழ்ந்தெடுக்க கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன்போது தங்கம், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரிடம்... இவ்வாறான தங்க ஆடை இருக்கிறதா அல்லது இல்லையா என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

