இந்த நாட்டில் இனியும் இனவாதம், மதவாதம், இலஞ்ச ஊழல் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படக்கூடாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இன்று(28.06.2026) மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைப்பெற்ற டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக…

இந்த நாட்டில் இனியும் இனவாதம், மதவாதம், இலஞ்ச ஊழல் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படக்கூடாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இன்று(28.06.2026) மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைப்பெற்ற டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.நட்டஈடு வழங்கள்

இதன்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 35 பயனாளிகளுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான நஷ்ட ஈடு தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பயனாளிகளுக்கு 4.5 இலட்சம் ரூபாய் வீதமும் பாதிக்கப்பட்ட 31 கடற்றொழிலாளர்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வீதமும் நட்டஈடு தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் வளர்ப்போர்,நன்னீர் வளர்ப்பு ஆகிய கடற்றொழில்களில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் மற்றும் இறால் வளர்ப்பு திட்டங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுதல் இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

நாங்கள் முன்னர் போன்றல்ல, முன்னர் நீங்கள் வருகின்ற பொழுது உங்களுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருந்தார்கள்.அரசியல்வாதிகளுடைய அராஜகம் இருந்தது.

அந்த அராஜகம் அனைத்திற்கும் இன்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன் நீங்கள் வந்து சுதந்திரமாக செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழல் நாட்டில் உருவாகியிருக்கின்றது. அதேபோன்று இன்றைக்கு நாட்டில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு வருகின்றது. அதன் மூலமாக நாட்டில் யார் தவறு செய்தாலும், யார் குற்றம் இழைத்தாலும், அந்த குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிரான எங்கள் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணை

இந்த நாட்டில் இலஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம் என்று நாங்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம்.

அந்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப இதுநாள் வரைக்கும் யாருமே எதிர்பார்க்காத பெரிய புள்ளிகளான ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சாக்கள் அதேபோன்று நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருக்கின்ற மக்களுடைய பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் அனைவரும் இன்றைக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

அது மாத்திரமல்ல, இன்றைக்கு சுரேஷ் சலே போன்ற புலனாய்வுப் பிரிவினுடைய பிரதம அதிகாரியும் கூட விசாரிக்கப்பட்டு வருகின்றார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நாட்டின் இடம்பெற்றிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அதேபோன்று நாங்கள் போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றோம். அது மாத்திரமல்ல போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் அவர்களுடைய ராஜாங்கம் இன்றைக்கு முடக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதனாலேயே தான் முன்னாள் நீதி அமைச்சரும், அவருடைய மகனும் கூட இதில் தொடர்புபட்டிருக்கின்ற விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன், பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் பாதாள உலகத் தலைவர்களைச் சட்டத்திலிருந்து பாதுகாக்கின்றோம் என்ற வாக்குறுதியின் கீழ், கோடிக்கணக்கான ரூபாய் பரிமாறப்பட்டுள்ளதாக விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

முன்னாள் ரணில் விக்ரமசிங்கவோடு இருந்த முக்கியமான புள்ளிகளும் கூட இதற்குப் பின்னால் இருக்கின்றார்கள் என்று இன்றைக்கு விசாரணைகள் முடுக்கப்பட்டு வருகின்றது.

விஜயதாச ராஜபக்ச இதற்குப் பின்னால் இருக்கின்றாரா என்கின்ற விசாரணைகள் கூட முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எது எவ்வாறான போதிலும் விசாரணைகள் தொடர்கின்றன.செம்மணி படுகொலை இவ்வாறான கள்ளர்கள், திருடர்கள், மோசடிக்காரர்கள் படிப்படியாக ஒருவர் பின் ஒருவராக இன்றைக்கு சிறைச்சாலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

செம்மணிபகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தேவையில்லாத போராட்டம். ஏனென்றால் நீங்கள் போராட வேண்டியதில்லை, நீங்கள் போராடுகின்றது எதற்காக என்றால் வேறொன்றுமல்ல, 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஏற்பட்ட படுகொலைக்காகத்தான். அந்த படுகொலைகளைச் செய்த பாவிகள் இருக்கின்றார்கள் என்பது உண்மை.

அன்றைய காலகட்டங்களில் கொலை செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய உடல் எச்சங்கள் இன்றைக்குத் தோண்டி எடுக்கப்படுவது உண்மை. அது தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்ததல், அதற்கு போதுமான நிதி ஒதுக்கீடுகளைச் செய்தல், நீதிபதிகளை நியமித்தல் மற்றும் பாதுகாப்புப் பிரிவை பலப்படுத்தியதல் ஆகியவற்றை செய்தது எங்களுடைய அரசாங்கமாகும்.

ஆகவே மக்களுக்கு நீதியை நிலைநாட்டக்கூடிய செயல்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம் என்பதை இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

அதனால் கடந்த காலத்தில் இந்த மக்களுடைய மனித எலும்புக்கூடுகளை வைத்து அரசியல் செய்த அரசியல்வாதிகள், எமது நாட்டு மக்கள் மத்தியில் மீண்டும் இனவெறியைத் தூண்டுகின்றனர். அதன் மூலமாக இந்த நாட்டில் ஒரு கிலேச தன்மையை ஏற்படுத்துகின்ற பாவித்தனமான செயல்பாடுகளையும் முன்னெடுக்கின்றார்கள் என்பதையும் மக்கள் மறந்துவிடக் கூடாது.ஊழலற்ற நாட்டை உருவாக்குதல்

உங்களுக்குத் தெரியும் 1987ஆம் ஆண்டு, 89ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலே 70,000ற்கும் அதிகமான எங்களுடைய சகாக்கள் கொல்லப்பட்டார்கள். எங்களுடைய ரோஹண விஜேவீர தோழர் உயிரோடு பொரளை கணத்தையில் எரிக்கப்பட்டார்.

நாங்கள் அதற்காக இன்றைக்கு விசாரணைக் கமிஷன் அமைக்கவில்லை. ஏனென்றால் எங்களுடைய எதிர்பார்ப்பு வேறொன்றுமல்ல, அவர்கள் கண்ட கனவொன்று இருக்கின்றது. அந்த கனவு என்னவென்றால் இந்த நாட்டிலுள்ள மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான்.

இந்த நாட்டில் இனியும் இனவாதம், மதவாதம், சுரண்டல், இலஞ்ச ஊழல் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது. அதுதான் அவர்களுடைய கனவு. அந்தக் கனவை இன்றைக்கு நாங்கள் நனவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு வடக்குக் கிழக்கில் வாழுகின்ற மக்களுடைய எதிர்பார்ப்புகள், ஆசைகள் மற்றும் அபிலாஷைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு நிறைவேற்றப்படுகின்ற பொழுது இந்த நாட்டில் இருக்கின்ற அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதேபோல் செம்மணிக்கான நீதியையும் நாங்கள் வழங்குவோம் என்றும் உறுதியளிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கரையோர நீர் வாழ் உயிரினங்கள் வாய்ப்பு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜீ.ஜீ.குணசேன, இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அதிகார சபை மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) எந்திரி என்.சிவலிங்கம் மற்றும் கரையோர நீர் வாழ் உயிரினங்கள் வாய்ப்பு அபிவிருத்தி கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.