தற்போதைய அரசின் அமைச்சர்களை, எவ்வித பாதுகாப்பும் இன்றி விவசாய மக்களிடம் அனுப்பினால் அவர்கள் மீதான மக்களின் உண்மையான மனநிலையையும், விவசாயிகளின் அதிருப்தியையும் நேரடியாக அறிந்துகொள்ள முடியும் என்று ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார். ஜனசேத பெரமுன க…
தற்போதைய அரசின் அமைச்சர்களை, எவ்வித பாதுகாப்பும் இன்றி விவசாய மக்களிடம் அனுப்பினால் அவர்கள் மீதான மக்களின் உண்மையான மனநிலையையும், விவசாயிகளின் அதிருப்தியையும் நேரடியாக அறிந்துகொள்ள முடியும் என்று ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.
ஜனசேத பெரமுன கட்சியின் தலைமைப் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் தேர்தலுக்கு முன்னர் விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்தி வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய மக்களின் துயரங்களைத் தங்களுடைய துயரங்களாகக் காட்டி அரசியல் செய்த அவர்கள், இன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் அதே விவசாய மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நாட்டின் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். ஒரு கிலோ நெல்லை விற்றுப் பெற்ற பணத்தில் ஒரு சவர்க்காரத் துண்டைக் கூட வாங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. சந்தையில் ஒரு சவர்க்காரத் துண்டின் விலை சுமார் 200 ரூபாவாக உள்ளது. ஆனால், விவசாயிகளின் உற்பத்திகளுக்கு அதற்கு நிகரான நியாயமான விலை கிடைப்பதில்லை.மக்களின் நிலை.. இத்தகைய நிலையில் விவசாயக் குடும்பங்கள் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியும்?
ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு 650 கிராம் அரிசி போதுமானது என்ற வகையில் அரச தரப்பால் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.மூன்று அல்லது நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் 650 கிராம் அரிசியை மட்டும் கொண்டு எவ்வாறு உயிர் வாழ முடியும்? இந்தக் கருத்துக்கள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்பதுடன் முற்றிலும் முரணானவை ஆகும். இத்தகைய கருத்துக்களைக் கூறும் அமைச்சர்கள், தங்களது வீடுகளில் அந்த அளவு அரிசியைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியுமா என்பதை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அமைச்சர்களான வசந்த சமரசிங்க, கே.டி. லால் காந்த மற்றும் நாமல் கருணாரத்ன உள்ளிட்டோர் விவசாய மக்களின் கடுமையான எதிர்ப்பை தற்போது நாடு முழுவதும் எதிர்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை முறையாகப் பொதியிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்துத் திறன்களும் நமக்குள்ளன. இருப்பினும் அதற்கான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மாறாக, வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கே தற்போதைய அரசு முன்னுரிமை வழங்கி வருகின்றது. இதன் பின்னணியில் இலாப நோக்குடைய அரசியல் சூழ்ச்சி இருப்பதாக மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.
தேர்தலுக்கு முன்னர் தங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் தேவையில்லை, பொதுமக்களே தங்களது பாதுகாப்பு என்று மேடைகளில் முழங்கிய அமைச்சர்கள், இன்று பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்குள் சொகுசாகச் செயற்படுகின்றனர். ஜனாதிபதி இந்த அமைச்சர்களைப் பாதுகாப்பின்றி நேரடியாக விவசாய மக்களிடம் அனுப்பிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மக்களின் உண்மையான அதிருப்தியின் அளவை அவர்கள் தெளிவாக உணர்ந்துகொள்வார்கள்." என்றார்.

