ஆஸ்திரேலியாவின் எக்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு (Export Finance Ltd) வழங்கப்பட வேண்டிய கடன் தவணைத் தொகையில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை, திட்டமிட்ட இணையக் குற்றம் மற்றும் திருட்டு என பொது நிதிக்கான குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்…

ஆஸ்திரேலியாவின் எக்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு (Export Finance Ltd) வழங்கப்பட வேண்டிய கடன் தவணைத் தொகையில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனமை, திட்டமிட்ட இணையக் குற்றம் மற்றும் திருட்டு என பொது நிதிக்கான குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர், இந்த சம்பவம் ஒரு பாரிய நிதி மோசடி என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, இதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குச் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த மோசடிக்கான காரணங்கள்:

இணையக் குற்றத்தின் பின்னணி: குறித்த பணம் செலுத்தப்பட வேண்டிய சமயத்தில் முறையான பாதுகாப்பற்ற சூழலைப் பயன்படுத்தி, இணையக் குற்றவாளிகள் இந்த மோசடியைச் செய்துள்ளனர்.

நிறுவன ரீதியான குறைபாடுகள்: இந்தச் பரிவர்த்தனையில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கிடையில் காணப்பட்ட நிறுவன ரீதியான குறைபாடுகள் மற்றும் நடைமுறையில் இருந்த மெத்தனப் போக்குகளே இந்த இணையக் கொள்ளைக்கு வழிவகுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவம் நாட்டின் நிதி நிர்வாகத்தில் உள்ள பாரிய ஓட்டைகளை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இவ்வாறான மோசடிகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்குப் பொறுப்புக்கூறல் மற்றும் கணினிப் பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாகப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.