பாதாள உலகக் குழுக்களையும் திட்டமிட்ட குற்றச் செயல்களையும் ஒழிக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு வழங்காது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மக்கள் மத்தியில் தவறான கருத்துகளைப் பரப்பி கேலி அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் என்று சுற்றுலாத்த…
பாதாள உலகக் குழுக்களையும் திட்டமிட்ட குற்றச் செயல்களையும் ஒழிக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு வழங்காது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மக்கள் மத்தியில் தவறான கருத்துகளைப் பரப்பி கேலி அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தற்செயலானவை அல்ல. அவை திட்டமிட்ட முறையில் பாதாள உலகக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டவை. தற்போது வீதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்துவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.சிறைக்குள் இருந்து சதித்திட்டம்சட்ட நடவடிக்கை எடுக்கும்போது பாதாள உலகக் குழுவினர் சிறைக்குள் இருந்து சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர். சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி, புலனாய்வு அதிகாரிகளைக் கொலை செய்வதன் மூலம் அரசின் நடவடிக்கைகளைத் தடுத்துவிடலாம் என அவர்கள் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
நாட்டின் பாதுகாப்புச் சூழல் குறித்த தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இவ்வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதிலும், ஊடகங்களில் பேசுவதற்கு வாய்ப்புத் தேடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றார்.அரசு பதவி விலக வேண்டும் என அவர் கூச்சலிடுவது, தங்களின் போதைப்பொருள் வலை அமைப்புகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள், இலஞ்சம், கொலைகள் தொடர்பான உண்மைகள் வெளிவரும்போது தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வதற்கான முயற்சியாகும். தங்களின் திருட்டை மறைக்கவே அவர் இவ்வாறு செயற்படுகின்றார்.
நாட்டு வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் ஆணையை நாம் பெற்றுள்ளோம். பொதுமக்கள் எப்போது நாங்கள் செய்தது போதும் என்று சொல்கின்றார்களோ, அன்றுதான் நாங்கள் பதவியிலிருந்து விலகுவோம். அதைவிடுத்து, எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களுக்காக அரசு வீட்டுக்குப் போகத் தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.

