எதிர்க்கட்சியில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தற்போதைய அரசு, நாட்டை ஒரு கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்றுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார விமர்சித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன க…

எதிர்க்கட்சியில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தற்போதைய அரசு, நாட்டை ஒரு கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்றுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார விமர்சித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, "அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது, மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தார். ஆனால், இன்று ஜனாதிபதியாக இருக்கும் அவர், எதிர்க்கட்சியில் இருந்தபோது பேசியவருக்கும் தற்போதைய அவருக்கும் இடையில் பெரும் வித்தியாசம் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது. வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற கொள்கைப் பிரகடனத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, மக்களை வறுமையின் உச்சத்துக்கே தள்ளியுள்ளது.அரசின் வாக்குறுதிகள்..

திறைசேரியில் பணம் இருப்பதாகக் கூறினாலும், மக்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. தூய்மையான இலங்கை என்று கூறும் அரசு, உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகச் சீர்கேட்டால் நாடு முழுவதும் டெங்கு பரவும் சூழலை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் குறித்துப் பேசியவர்கள், இன்று நெல் கொள்முதல் விலையை வழங்க முடியாமல் தவிக்கின்றனர். அரிசி இறக்குமதியை நிறுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்து உள்நாட்டு விவசாயத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டனர்.

இறுதியாக, இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசும் செய்யாத வகையில், நீதிமன்றக் கட்டமைப்புக்குள் தலையீடு செய்ய இந்த அரசு முயற்சிக்கின்றது. உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலம், தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற அரசு திட்டமிடுகின்றது. இத்தகைய செயல்கள் நீதித்துறையின் சுதந்திரத்தையும், மக்கள் அதன் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் சீர்குலைக்கும். எனவே, நாட்டை இத்தகைய குழப்ப நிலைக்குத் தள்ள வேண்டாம் என அரசை எச்சரிக்கின்றேன்" என்றார்.