நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்துள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்…

நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்துள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் தன்னை தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி, இழிவுபடுத்தி, வன்முறை அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைகள் அண்மைக் காலமாக தீவிரமடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக நாடாளுமன்ற அவையில் அவருக்கு அருகில் அமர்ந்திருப்பது தனது கவனத்தைச் சிதறடிப்பதால் சிரமமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அர்ச்சுனா இராமநாதன் சுயேச்சைக் குழுவில் இருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், வழமையாக சுயேச்சை உறுப்பினர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களுக்குப் பின்னரே இருக்கை ஒதுக்கப்படும் நடைமுறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், அந்த நடைமுறைக்கு மாறாக அர்ச்சுனா இராமநாதன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இது வழக்கமான இருக்கை ஒதுக்கீட்டு நடைமுறைக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வழமையான நடைமுறைக்கு அமைவாக அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பின்னர் சுயேச்சை உறுப்பினர்கள் அமர்த்தப்படும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.