2010-ஆம் ஆண்டு மொனராகலையில் ஆறு வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் எட்டு வருடக் கடுமையான சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. தனது அண்டை வீட்டைச் சேர்ந்த சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்…
2010-ஆம் ஆண்டு மொனராகலையில் ஆறு வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் எட்டு வருடக் கடுமையான சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. தனது அண்டை வீட்டைச் சேர்ந்த சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பிரதிவாதி மீது சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தலையிடுவதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை
விசாரணையைத் தொடர்ந்து, மொனராகலை உயர் நீதிமன்றம் பிரதிவாதியைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு எட்டு வருடக் கடுமையான சிறைத்தண்டனை விதித்தது. அத்துடன், 20,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டது. தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பிரதிவாதி, பல்வேறு காரணங்களை முன்வைத்தார். குறிப்பாக, அரசுத் தரப்புச் சாட்சியங்களை மதிப்பிடுவதில் விசாரணை நீதிபதி தவறான அணுகுமுறையைக் கையாண்டதாகவும், அரசுத் தரப்பு வழக்கில் இருந்த முரண்பாடுகளைச் சரியாகப் பகுப்பாய்வு செய்யத் தவறியதாகவும் அவர் வாதிட்டார்.
இவ்வாதங்களை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலமானது சுயாதீன சாட்சிகள் மூலம் முன்வைக்கப்பட்ட தெளிவான மற்றும் வலுவான சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துவிட்டதாக விசாரணை நீதிபதி சரியாகவே முடிவு செய்திருந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிலோ அல்லது தண்டனையிலோ தலையிடுவதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்தது.
அதன்படி, மொனராகலை உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு மற்றும் தண்டனை ஆகிய இரண்டையும் உறுதிப்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம், சந்தேக நபரின் மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

