பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது பலவீனமான நிலையில் காணப்பட்டாலும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அது வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உலகளாவிய காலநிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில்,…

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது பலவீனமான நிலையில் காணப்பட்டாலும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அது வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய காலநிலை முன்னறிவிப்புகளின் அடிப்படையில், இந்த நிலை காரணமாக இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் முன்னைய அறிவிப்புகளின்படி, 2026 நவம்பர் முதல் 2027 ஜனவரி வரையான காலப்பகுதியில் ‘எல் நினோ’ நிலை தீவிரமடைவதற்கு 63 சதவீத வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தீவிரமடையாமல் இருப்பதற்கும் மூன்றில் ஒரு பங்கு வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது.

இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் தற்போதைய தென்மேற்கு பருவமழை குறைவடையக்கூடும் எனவும், அதேவேளை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்கால மழைவீழ்ச்சி நிலைமைகளை கருத்தில் கொண்டு, நீரை திறமையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விவசாயம், மின்சார உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீர் பயன்பாடு முறையாக முகாமைத்துவம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ‘எல் நினோ’ தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக அனைத்து அமைச்சுகளையும் இணைத்து விசேட வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்திகே தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் பெரும் போக விவசாய நடவடிக்கைகளை உரிய காலத்திற்கு முன்னதாக ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.