இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடனான ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில், அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிபுணத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் இந்த இரண்டு…

இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடனான ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில், அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிபுணத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் இந்த இரண்டு தனித்தனி அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சிகிச்சை, 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பையை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டதுடன், மற்றையது மிகவும் சிக்கலான சிறுநீரக அறுவை சிகிச்சையாகும். இந்த ரோபோடிக் அமைப்பானது தானாகவே இயங்கி அறுவை சிகிச்சைகளைச் செய்வதில்லை என்றும், இது முற்றிலும் அறுவை சிகிச்சை நிபுணரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்குகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதன்போது, பிரத்யேக கன்சோல் வசதியைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சை நிபுணர்கள் தங்களது கைகளின் அசைவுகளை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் ரோபோடிக் கைகளை வழிநடத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட கணினி நிரலாக்கத்தின் ஒருங்கிணைப்பு காரணமாக, இந்த அமைப்பினால் மிக நுணுக்கமான அசைவுகளை மேற்கொள்ள முடிகிறது. இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் போது துல்லியத்தன்மையை மேலும் அதிகரிக்க உதவுகிறது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடனான அறுவை சிகிச்சைகள் மூலம் நோயாளிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையானது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அறுவை சிகிச்சையின் போது இரத்தப்போக்கு பெருமளவு குறைக்கப்படுவதுடன், மிகச் சிறிய வெட்டுக்காயங்களே  ஏற்படுத்தப்படுவதாக வைத்தியர் சமந்தி டி சில்வா தெரிவித்துள்ளார். இதனால் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் குறைவடைவதுடன், நோயாளிகள் மிக விரைவாக குணமடைந்து வீடு திரும்ப முடியும். அத்துடன் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் தவறுகளுக்கான வாய்ப்புகளும் இதனால் மிகக் குறைவாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.