திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலைக்கான அரச காணிகளையும் தனியார் காணிகளையும் அடையாளம் காணவென காணி அளவீட்டு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப…

திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலைக்கான அரச காணிகளையும் தனியார் காணிகளையும் அடையாளம் காணவென காணி அளவீட்டு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டார். விஷேட வர்த்தமானி ஆளும்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெப்பை உரையாற்றும் போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, வீரமுனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 25 விவசாயிகளின் 197 ஏக்கர் மற்றும் 3 ரூட் உறுதிக் காணி 1970 இல் இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலை பயன்பாட்டுக்காக அன்றைய அரசினால் விஷேட வர்த்தமானி மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த காணிகளை மீளப்பெற்றுக் கொள்ளவென இந்த விவசாயிகளும் அவர்களது பரம்பரையினரும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக முயற்சி செய்து வருகின்றனர்.கடந்த கால காணி அமைச்சர்கள், கைத்தொழில் அமைச்சு அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட பல உயர் அதிகாரிகளை அவர்கள் பல தடவைகள் சந்தித்துள்ள போதிலும் இற்றை வரையும் அவர்களுக்கு குறித்த காணியோ அல்லது மாற்றுக் காணியோ அல்லது காணிக்குரிய நஷ்டஈடோ இற்றை வரையும் கிடைக்கப் பெறாதுள்ளது.

இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி குறித்த விவசாயிகளுக்கு காணியை மீளப் பெற்றுக் கொடுக்கவோ அல்லது அக் காணிக்குரிய நஷ்டஈட்டை வழங்கவோ அல்லது மாற்று காணி வழங்கவோ அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் லால் காந்த, இவ்விடயம் தொடர்பில் காணி ஆணையாளரிடம் கேட்டறிந்தார்.இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையில் தனியார்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பாக இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம், கைத்தொழில் அமைச்சு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், இறக்காமம் பிரதேச செயலாளர் தனியார் காணி உரிமையாளர்களுடன் பல கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதோடு காணியை அடையாளம் காணும் விடயங்களுக்கான செலவினை நில அளவையாளர் திணைக்களத்திற்கு வழங்குவதாக கைத்தொழில் அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. இருந்தும் அந்த தீர்மானம் செயற்படுத்தப்படாமல் உள்ளதாக காணி ஆணையாளர் குறிப்பிட்டார். இதன்போது அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையின் காணி விவகாரம் தொடர்பில் விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் லால் காந்தவுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார்.