லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 'Jaffna Kings அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும், விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா…
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 'Jaffna Kings அணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும், விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (17) பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை
இந்தக் கைது சம்பவம் குறித்து வெளியாகும் செய்திகள் தொடர்பில் தங்களது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காகத் தமது நிறுவனம் மற்றும் எல்.பி.எல் ஒழுங்கமைப்புக் குழு ஆகியன அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போட்டித் தொடரின் நேர்மைத்தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தாம் கடமைப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக, இப்போட்டித் தொடருடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினராலும் முன்னெடுக்கப்படும் ஊழல்கள், ஒழுக்கக்கேடான நடத்தைகள் அல்லது முறையற்ற செயல்களை எவ்வகையிலும் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அது கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தினால் போட்டித் தொடருக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (17) இரவு கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெறவுள்ள 'காலி கேலன்ட்ஸ் - ஜப்னா கிங்ஸ்' (Galle Gallants - Jaffna Kings) அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி இடம்பெறும் என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்போட்டித் தொடரை மிக உயர்ந்த ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நேர்மைத்தன்மையின் தரநிலைகளுக்கு இணங்க நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு, விளையாட்டுகளுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவுடன் இணைந்து நெருக்கமாகச் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, ஊழலற்ற சூழலை உறுதி செய்வதற்காக, இம்முறை போட்டித் தொடர் முழுவதும் சுயாதீன அமைப்பொன்றின் நிபுணர் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது

