மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகம் ஆகியவற்றினால் முக்கியமான 6 துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் கையளிக்…

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும்  மாற்றுத்திறனாளிகள் சமூகம் ஆகியவற்றினால்  முக்கியமான 6  துறைகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் கையளிக்கப்பட்டது.

இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்காகவும், அவர்களுக்கான அணுகல் வசதிகளை  மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டமைக்காகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் சார்பில் அவர்கள்  நன்றி தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்களை சமூகத்தின் சாதாரண பங்காளிகளாக மாற்றுவது இன்றியமையாதது. அதற்காக 'ஒன்றாக பிடி தளராது'  தேசிய கொள்கை வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளும் அதற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இதன் போது தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலாத் துறையில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாரம்பரியமாக மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள பயிற்சிகள் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் போதுமான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் சம பங்காளிகளாக மாற்றுவதற்கு அரசாங்கம் பல கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், அதற்குத் தேவையான சுற்றறிக்கைகள் மற்றும் பணிப்புரைகளை விரைவாக வெளியிடுவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார். (a)