காலாவதியான சீனியைப் புதிய சீனியுடன் கலந்து, மறுபொதியிடல் செய்து குறைந்த விலைக்குச் சந்தைக்கு விநியோகித்து வந்த பாரிய அளவிலான சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலையை நுகர்வோர் விவகார அதிகார சபையினரும் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து நேற்று (07.07.20…
காலாவதியான சீனியைப் புதிய சீனியுடன் கலந்து, மறுபொதியிடல் செய்து குறைந்த விலைக்குச் சந்தைக்கு விநியோகித்து வந்த பாரிய அளவிலான சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலையை நுகர்வோர் விவகார அதிகார சபையினரும் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து நேற்று (07.07.2026) அதிரடியாக முற்றுகையிட்டுச் சீல் வைத்துள்ளனர்.
கம்பஹா, களனி - பேலியகொட பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான பாரிய களஞ்சிய வளாகம் ஒன்றிலேயே இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளது.ஊழல் தடுப்புப் பிரிவுஇது குறித்து வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தத் திடீர் முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, தற்போது முற்றிலும் காலாவதியாகியுள்ள சீனி இருப்புகளையே இவர்கள் மோசடியாகப் பயன்படுத்தியுள்ளனர்.அந்தப் பழைய சீனியை, காலாவதியாகாத புதிய சீனி இருப்புகளுடன் கலந்து, மீண்டும் புதிய பைகளில் பொதியிட்டுச் சந்தைக்கு விநியோகித்துள்ளமை புலனாய்வு அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட சீனி, தற்போதைய சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இந்த பாரிய மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.பொலிஸ் விசாரணை அதிகாரிகள் இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், குறித்த களஞ்சியசாலையில் தலா 50 கிலோகிராம் எடையைக் கொண்ட சுமார் 85 ஆயிரம் சீனி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 4.2 மில்லியன் கிலோகிராம் (42 இலட்சம் கிலோ) சீனியை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தற்போது தற்காலிகமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் பொலிஸாரால் குறித்த களஞ்சிய வளாகத்துக்கு முழுமையாகச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த மோசடி குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

