ஹோமாகம, கலகாஹேன பகுதியிலுள்ள கால்வாயொன்றில் இருந்து நேற்று (16) அதிகாலை மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நப…

ஹோமாகம, கலகாஹேன பகுதியிலுள்ள கால்வாயொன்றில் இருந்து நேற்று (16) அதிகாலை மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஆவார்.பிரேத பரிசோதனை இவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் நிரந்தர ஊழியராகப் பணிபுரிந்து கொண்டே, பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலமான வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 15ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் வாடகை சவாரி ஒன்றிற்காக நபர் ஒருவரைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதற்காக இவர் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

குறித்த கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ள ஏலக் காணியொன்றினுள் வைத்தே இந்தத் துரதிர்ஷ்டவசமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கொலையாளிகள் அந்த நபரைத் தடுத்து நிறுத்திக் கொடூரமாகக் கொலை செய்ததுடன், அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள், தங்க மாலை, கைத்தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

குற்றம் நடந்ததாகக் கருதப்படும் காணியை சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்து உயிரிழந்த நபர் அணிந்திருந்ததாகக் கருதப்படும் ஒரு ஜோடி காலணிகளையும், ஒரு 20 ரூபா பணத்தாளையும் கண்டெடுத்துள்ளனர்.

நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கழுத்துப் பகுதி அறுக்கப்பட்டமையினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளில் ஹோமாகம பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.