வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி, உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை இன்று (10) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் 'அரோகரா' கோஷத்துடன் திறந்து வைக்கப்பட்டது. கதிர…
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி, உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை இன்று (10) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் 'அரோகரா' கோஷத்துடன் திறந்து வைக்கப்பட்டது. கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் உற்சவம், எதிர்வரும் 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறும் இவ்விழா, எதிர்வரும் 30 ஆம் திகதி மாணிக்க கங்கையில் நடைபெறும் பாரம்பரிய நீர்வெட்டு (தீர்த்தோற்சவம்) நிகழ்வுடன் பக்திபூர்வமாக நிறைவடையவுள்ளது. இந் நிலையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னிட்டு, உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, வழிபாடுகளில் கலந்துகொண்ட அதிதிகளால் குறித்த காட்டுப்பாதை பக்தர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இப்பாதையானது, எதிர்வரும் 24 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பாதயாத்திரையில் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் பக்தி சிரத்தையுடன் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் கொண்ட, அடர்ந்த கானகம், மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளைக் கடந்து, தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காகக் கதிர்காமம் நோக்கித் தங்களது புனிதப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

