கதிர்காமம் புனித பாதயாத்திரையில் காட்டுப்பகுதி வழியாகச் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான உணவுப் பொருட்களை மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பைக் கழிவுகளை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் எடுத்துச் சென்று, அங்கு உணவு சமைத்து வழங்கியிருப்பது இந்து மக்களையும் அவர்க…

கதிர்காமம் புனித பாதயாத்திரையில் காட்டுப்பகுதி வழியாகச் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான உணவுப் பொருட்களை மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பைக் கழிவுகளை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் எடுத்துச் சென்று, அங்கு உணவு சமைத்து வழங்கியிருப்பது இந்து மக்களையும் அவர்களது மத உணர்வுகளையும் அவமதிக்கும் மிக மோசமான செயல் என ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பாலைமீன்மடு பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையினால் மிகவும் மோசமான செயல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாநகர சபையின் கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் கதிர்காமம் நோக்கி செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் ஏற்றிச் செல்லப்பட்டு, உகந்தை பகுதியில் உணவு சமைத்து வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்து மக்களை இழிவுபடுத்தும் செயலாகக் கருதப்படுவதாகவும், இதனை ஈ.பி.டி.பி. வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற காரணத்தால் பல உணவகங்களை சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை செய்து மூடிவைக்கும் நிலையில், அதே அதிகாரிகள் குப்பைக் கழிவுகளை அகற்றும் வாகனத்தில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பான அதிகாரிகளை ஈ.பி.டி.பி. வன்மையாகக் கண்டிப்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சியைப் பொறுப்பேற்று ஒரு வருடத்திற்கும் மேலாகியுள்ள போதிலும், நகரிலுள்ள காந்தி பூங்கா, கந்தையா பூங்கா உள்ளிட்ட பல பொதுப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் காணப்படுவதாகவும், வடிகால்கள் கழிவுகளால் நிரம்பியுள்ளதுடன், வீதிகளில் குவிந்து கிடக்கும் திண்மக் கழிவுகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்தியாவசியமான திண்மக் கழிவு முகாமைத்துவத்தை முறையாக மேற்கொள்ள முடியாவிட்டால், அதற்கான திறமையும் ஆளுமையும் கொண்டவர்களுக்கு பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும், படித்த பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்கினால் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

காலம் காலமாக மாநகர சபையை கைப்பற்றிய தமிழரசுக் கட்சியால் உரிய அபிவிருத்தி நடவடிக்கைகளோ, திண்மக் கழிவு முகாமைத்துவமோ முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை வீணடித்து காலத்தை கடத்துவதற்குப் பதிலாக ஆளுமைமிக்கவர்களுக்கு பொறுப்பை வழங்கிவிட்டு பதவி விலகுவது சிறந்தது என்றும் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.