கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி, குறிப்பாக சுற்றுலாத்துறையின் முன்னேற்றம் தொடர்பான வாய்ப்புகளை ஆராயும் நோக்கில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் குழுவொன்று இன்று (11) மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தது. மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்…
கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி, குறிப்பாக சுற்றுலாத்துறையின் முன்னேற்றம் தொடர்பான வாய்ப்புகளை ஆராயும் நோக்கில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் குழுவொன்று இன்று (11) மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தது.
மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல், மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
வருகை தந்த தூதுவர்கள் பாரம்பரிய மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபை சார்பில் மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கள், அவற்றின் அபிவிருத்தித் தேவைகள் மற்றும் மாநகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஆசிய நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை வழங்குமாறு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
நிகழ்வின் நிறைவில், பங்கேற்ற ஐந்து நாடுகளின் தூதுவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கைகளும் கையளிக்கப்பட்டன.
மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநகர ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

