மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும், தமிழ் மக்கள் சார்ந்த இதர முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்து வலியுறுத்துமாறு, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்…

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும், தமிழ் மக்கள் சார்ந்த இதர முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்து வலியுறுத்துமாறு, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனான நேற்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அதிகாரப் பகிர்வு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அதிகாரப் பகிர்வு, புராதன சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து வடக்கு - கிழக்கு தமிழ்க் கட்சிகள், மலையகத் தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அடங்கிய ஆறு கட்சிகளின் கூட்டுச் சந்திப்பில் விரிவாகப் பேசினோம்.

தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாகாண சபையின் அதிகாரங்களை அரசு எந்தக் காரணத்தைக் கொண்டும் பறிமுதல் செய்யக் கூடாது.அண்மையில் மன்னார் மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டமை சட்டவிரோதமானதும், அரசமைப்புக்கு முரணானதும் ஆகும். பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் போன்ற மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளை நாம் எதிர்க்கின்றோம். மாகாண சபைத் தேர்தல்இவ்வாறான விடயங்கள் குறித்து மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.

மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், புதிய அரசமைப்பை உருவாக்குதல் மற்றும் மக்களின் காணிப் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆறு கட்சிகளின் கூட்டு மன்றத்தில் முன்னிலைப்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.குறிப்பாக, இந்த விவகாரங்கள் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் இராஜதந்திரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுமாறு, குறித்த மன்றத்தில் சுமந்திரன் உள்ளிட்ட தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறான கூட்டுச் செயற்பாடுகளே சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கு வலுச்சேர்க்கும் என குறிப்பிட்டுள்ளார்.