மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையிலும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (11) ந…

மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையிலும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (11) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தேர்தல் முறையை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவில் தாமும் உறுப்பினராகச் செயற்பட்டு வருவதாக கூறினார்.

அமைச்சரின் தலைமையில் இயங்கும் குறித்த குழு நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரண்டு சுற்று விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் பெறப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறை தொடர்பாக சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் தொடர்ந்தும் நிலவுவதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சவால்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்தும் வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்டாலும், பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் புதிய தேர்தல் முறைமையை உருவாக்கி, அதன் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.