Colombo (News 1st) முத்துராஜவெல பிரதேசத்தில் மேலும் 7 எண்ணெய் களஞ்சியப்படுத்தல் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அவற்றில் 4 தாங்கிகள் விமான எரிபொருளைக் களஞ்சியப்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஜனக ராஜகருணா தெர…

Colombo (News 1st) முத்துராஜவெல பிரதேசத்தில் மேலும் 7 எண்ணெய் களஞ்சியப்படுத்தல் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அவற்றில் 4 தாங்கிகள் விமான எரிபொருளைக் களஞ்சியப்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.பெற்றோலிய விநியோகம் மற்றும் களஞ்சியப்படுத்தல் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த களஞ்சியத் தாங்கிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.முத்துராஜவெலயில் 3 தாங்கிகளை நிர்மாணிப்பதற்கான விலைமனுக்களைக் கோரும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டு அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.மேலும் இரு களஞ்சிய தாங்கிகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை,அடுத்த மாத இறுதியளவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதற்கு மேலதிகமாக முத்துராஜவெலயில் இருந்து கட்டுநாயக்க வரை எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக 21 கிலோமீற்றர் நீளமான குழாய் மார்க்கமொன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா குறிப்பிட்டார்.கொழும்புத் துறைமுக வளாகத்திலிருந்து கொலன்னாவை வரை எண்ணெய்யைக் கொண்டு செல்வதற்கான புதிய குழாய் மார்க்கமொன்றை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார்.இந்த திட்டங்களின் மூலம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் மேம்படுத்தப்படுமென அவர் கூறினார்.எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை 2 மடங்காக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதனிடையே, மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த எரிபொருள் விலைகள் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளன.இன்று காலை நிலவரப்படி பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 85 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.அமெரிக்க WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 80 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் நாட்டுக்குப் பெற்றோலிய உற்பத்திகளைக் கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் சடுதியாக ஏற்படும் மாற்றங்கள் சவாலாக அமைந்துள்ளாதாக அவர் கூறினார்.யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த மாத இறுதியில் மக்களுக்கு பாரிய நன்மைகளை வழங்க எதிர்பார்க்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.எனினும் தற்போதைய விலை நிலவரங்களுக்கு அமைய அந்த நிலைமை சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.எதிர்வரும் 15 நாட்களில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் தாக்கங்களின் அடிப்படையிலேயே அடுத்த மாதத்திற்கான எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுமென அவர் கூறினார்.