முட்டை விலை அதிகரிப்புக்கு தற்போதைய அரசாங்கமும் விவசாயத் திணைக்களமுமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். முட்டை விலைகளில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் அறிவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நட…

முட்டை விலை அதிகரிப்புக்கு தற்போதைய அரசாங்கமும் விவசாயத் திணைக்களமுமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். முட்டை விலைகளில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் அறிவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கோழிப் பண்ணைத் துறையின் மிக அத்தியாவசிய தேவையாகச் சோளம் காணப்படுகின்றது. தற்போது சோள இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் சோள உற்பத்தி முட்டை உற்பத்திக்கு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார். சோளத்திற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்துமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்த போதிலும், நடைமுறையில் அது சாத்தியமற்ற ஒன்றாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். சோளத்திற்கு மாற்றீடாக வேறு உணவுகளைப் பயன்படுத்துவது கோழிகளின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அரிசி போன்ற மாற்று உணவுகளால் கோழிகளுக்குக் குடல் அழற்சி மற்றும் தொற்றுகள் ஏற்படுவதோடு, முட்டை உற்பத்தி 20% முதல் 30% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். பண்ணையாளர்கள் தற்சமயம் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.மேலும், விலங்கு உணவுகளில் போலி வியாபாரிகள் 'டொலமைட்' போன்ற இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதால் பெருமளவிலான கோழிகள் உயிரிழந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதனால் பண்ணையாளர்களுக்கு மீள முடியாத இழப்பு ஏற்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். விலங்கு உணவுகளின் தரம் குறைந்துள்ளதன் காரணமாக நாளாந்த முட்டை உற்பத்தி வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் சந்தையில் முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.