நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இதன்படி, உயிரிழந்த அதிகாரிகளின் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களினாலேயே உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக பிரேதப…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி, உயிரிழந்த அதிகாரிகளின் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களினாலேயே உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேரின் சடலங்களுக்கு ஐந்து பேர் கொண்ட சட்ட மருத்துவ நிபுணர்கள் குழு பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் தாக்குதலுக்கு இலக்கானதால் உயிரிழந்துள்ளனர் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும், ஒருவரின் மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையில் வெளியான உண்மை இன்று (09.07.2026) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான உண்மைகள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டதுடன், அதற்கான மரண விசாரணைச் சாட்சியங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 28 சடலங்களில், 24 பேரின் பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்து, அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள நான்கு சடலங்களுக்கான பிரேதப் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களில் ஒருவராக இந்திய இளைஞர் ஒருவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக டாக்டர் சுஜீவ விக்ரமநாயக்க தலைமையில் ஐந்து பேர் கொண்ட சட்ட மருத்துவ நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் டாக்டர் பிரசன்ன அப்புஹாமி, டாக்டர் சமந்த விஜேரத்ன, டாக்டர் சமிந்த ராஜபக்ச் மற்றும் டாக்டர் ரமேஷ் அக்கியவன்ன ஆகியோர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு இதற்கிடையில், உயிரிழந்த எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் திருமதி ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலை தற்போது குற்றம் நிகழ்ந்த இடமாகக் கருதப்படுவதால், அங்கு கைதிகளை தொடர்ந்து தங்கவைத்திருப்பது பொருத்தமற்றது என சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. அத்துடன், வன்முறைச் சம்பவத்தால் சிறைச்சாலை வளாகத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான இறுதி மதிப்பீட்டு அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.