நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடைய அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்து, அவர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடர நடவடிக்க…

நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடைய அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்து, அவர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீர்கொழும்பு சிறைச்சாலையில் 8 சிறைச்சாலை அதிகாரிகளை சித்திரவதை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இக்கொடூரக் கொலைகளுடன் தொடர்புடைய சுமார் 75 கைதிகள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களில் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதிகாரிகளைக் கொலை செய்த அனைத்து கைதிகளையும் அடையாளம் காணும் விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மிக வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, தெரிவித்துள்ளார். கொலையாளிகளை அடையாளம் காண்பதற்காக, இச்சம்பவம் நடந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகளிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலையினுள் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கமராக்களின் காட்சிகள் அடங்கிய டிவிஆர் இயந்திரங்களைக் கண்டறிவதற்காக நீர்கொழும்பு சிறைச்சாலையை பொலிஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட 8 அதிகாரிகளும் அவசர உத்திகள் பிரிவைச் (சிறைச்சாலை பொலிஸ்) சேர்ந்தவர்களாவர். கைதிகளின் கொடூரமான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது மரண பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சில அதிகாரிகளின் தலைகளில் பெரிய கற்களைப் போட்டு தலை நசுக்கப்பட்டிருப்பதுடன், சில அதிகாரிகளின் வாய் மற்றும் மலக்குடல் வழியே துடைப்பக் கட்டைகளை உட்செலுத்தி மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக மரண பரிசோதனை அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலை நடத்திய கைதிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தற்போது விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர், அவர்களைக் கைது செய்து கொலைக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.