தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று(13.07.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெ…
தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று(13.07.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில்மேலும் கூறுகையில் -
தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம் முன்னெடுக்கப்படது.இதன் தொடர்ச்சியாக, 14.08.2026 வெள்ளிக்கிழமை தொடங்கி 17.08.2026 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் யாழ் நகரில் "நீதியின் ஓலம் 2" எனும் போராட்டத்தின் வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம் இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இறுதி நாள் (17.08.2026) மாபெரும் பேரணியும் நடை பெறவுள்ளது.
முன்பதாக தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து 412இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.செம்மணி மனிதப் புதைகுழி என்பது, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் சிறு சாட்சியம் மட்டுமே.
குறிப்பாக, 1996ஆம் ஆண்டில் இலங்கை அரசுப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட, 16 வயதுடைய பாடசாலை மாணவியின் வழக்கின் மூலமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.இப்படுகொலைக்கு முன்னதாக 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு காலத்திலும் அதன் பின்னரிலும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானோர் மிகக் கொடூரமாக படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்பதனை நிரூபிக்கும் வகையில், கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கை அரசுப் படைச் சிப்பாயின் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில், 1999ஆம் ஆண்டில் 15 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன.நீதியின் ஓலம் போன்ற கவனயீர்ப்பு நிகழ்வு, அணையாவிளக்கு போராட்டங்கள் ஆக எமது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இறுதி நாள் மாபெரும் பேரணி இதனடிப்படையில் "நீதியின் ஓலம் 2" போராட்டத்தின் கோரிக்கைகளாக -
1.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும்.
2.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும்.3.தமிழர்கள்மீது இனப்படுகொலை செய்த படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போல அனைத்து நாடுகளும் பயணத் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
4.தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். 5.இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
6."பயங்கரவாதத் தடைச் சட்டம்” என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்குமுறைகளை நிறுத்தவும், நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச அழுத்தம் தேவை.
7.கடந்த 77ஆண்டுகளாக ஒற்றை ஆட்சியின் கீழ் கட்டமைக்கப்பட்ட தமிழின சுத்திகரிப்பையும் தொடரும் தமிழர் இனவழிப்பையும் நினைவழிப்பையும் நிறுத்தி, ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும்."
8.வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
9.Unitary State / Ekiya Rajya அடிப்படையிலான போலி தீர்வு திட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டும்; தமிழர் தேச அதிகாரங்கள் மீளப்பெற முடியாத சுயநிர்ணயத்தின் அடிப்படையிலும் சர்வதேச உத்தரவாதத்துடனும் உறுதி செய்யப்பட வேண்டும்
10.பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான சட்டமூலம் (PTSA) முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும்.மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி, "நீதியின் ஓலம் 2" என்ற போராட்டம் 14.08.2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு செம்மணியில் ஆரம்பித்து தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் திரண்டு வருகை தந்து (17.08.2026) இறுதி நாள் மாபெரும் பேரணி யாழ் நகரில் இடம்பெறும்.இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புகளும், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் அமைப்புகள், மத அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச்சங்கங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவும் ஒத்துழைப்பும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

