யாழ்ப்பாணம் - பலாலி சந்தியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதற்காக வருபவர்களின் பயன்பாட்டிற்காக வலி.வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அங்கிருந்து அகற்றியுள்ளனர். அதேவேளை குடிநீர் தாங்கி மற…

யாழ்ப்பாணம் - பலாலி சந்தியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதற்காக வருபவர்களின் பயன்பாட்டிற்காக வலி.வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அங்கிருந்து அகற்றியுள்ளனர். அதேவேளை குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை வைத்தமை தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் அவற்றை மல்லாகம் நீதிமன்றில் ஒப்படைத்து, சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பலாலி பொதுநோக்கு மண்டபம்

யாழ்ப்பாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலாத்தளங்களில் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை தினசரி கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதனையடுத்து பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் சுற்றுலா பயணிகளின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த, குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளாக பலாலி சந்தியில் , பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடாத்தியிருந்தனர்.போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் எதிர்வரும் ஞாயிறுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அந்தப் பகுதியில் கொட்டகை அமைக்க பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.போராட்டக்காரர்கள் குறித்த பொதுநோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதுடன், மதிய உணவுகளை அந்த மண்டபத்தில் இருந்து உட்கொள்வதுடன் அங்கிருக்கும் குடிநீர் தாங்கி மற்றும், தற்காலிக மலசல கூட்டத்தினையே பயன்படுத்தி வந்துள்ளனர். அதனாலேயே பலாலி பொலிஸார் அவற்றை அங்கிருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

வயோதிப பெண்கள், முதியவர்கள் எனப் பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் அங்கிருந்த மலசல கூடம் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றை பலாலி பொலிஸார் எடுத்து சென்றமை அந்தப் பகுதி மக்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.