முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே அவர் தொடர்பில் எங்களிடம் தற்போது இருக்கும் ஒரே ஒரு தகவல் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இட…

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே அவர் தொடர்பில் எங்களிடம் தற்போது இருக்கும் ஒரே ஒரு தகவல் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இதன்போது,  வெளிநாட்டில் இருக்கும் பசில் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாவதற்காக நாட்டுக்குத் திரும்புவாரா என ஜகத் குமாரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  நீதிமன்றில் முன்னிலையாவார்..இந்த கேள்விக்கு பதிலளித்த ஜகத் குமார மேலும் தெரிவிக்கையில், பசில் ராஜபக்ச நாட்டுக்குத் திரும்புவது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், உரிய நேரத்தில் இந்த விடயங்களில் தலையிடுவார்.யாரும் நீதிமன்றத்தை தவிர்க்கவும் இல்லை, நீதிமன்றத் நடவடிக்கைகளைத் தவிர்க்க முயற்சிக்கவும் இல்லை. பசில் ராஜபக்ச சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார்.முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மாத்திரமே எமக்குத் தெரியும். ஆனால், அந்த நோயின் தன்மை குறித்து எனக்குத் தெரியாது.  அதேபோல, பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மாத்திரமே கட்சிக்கும் தெரியும். அத்துடன் இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என நான் நம்புகின்றேன். நாங்கள் இருக்கும் இடத்திற்கும் அவர் இருக்கும் நாட்டிற்கும் இடையே கணிசமான தூரம் உள்ளது. எனவே, அவர் எங்கே இருக்கிறார், என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து எமக்குத் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.