நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடிகளை மூடிமறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சிறைச்சாலை குழப்பங்களும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவோ என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச…
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடிகளை மூடிமறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சிறைச்சாலை குழப்பங்களும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவோ என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(09.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம், பல உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. அத்துடன் இது நாடு முழுவதும் பெரும் கொதிநிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு அச்சம் மிகுந்த காலமாகவும், பழிவாங்கும் உணர்வு மேலோங்கிய மாதமாகவும் மாறியுள்ளதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
மாகாண சபை தேர்தல்
இத்தகைய அரசாங்கத்தின் செயற்பாடுகள், மக்கள் மத்தியில் அரசின் மீதான நம்பிக்கையை முழுமையாகச் சிதைக்கின்றன.
ஒருபுறம் இவ்வாறான குழப்பங்களை உண்டாக்கி மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஆட்சியாளர்கள், மறுபுறம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர். தேர்தலை நடத்துவோம் என ஊடகங்கள் வாயிலாகப் போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.
எனவே, தங்களின் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் கையாளும் இவ்வாறான தந்திரோபாயங்களை பொதுமக்கள் தெளிவாக இனங்கண்டு கொள்ள வேண்டும் என்றார்.

