இந்தியாவில் திருநெல்வேலி நகரின் பாறையடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாறையடி பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் (32) என்பவர் இன்று தனது வீட்டின் அருகே நடந்து சென்…
இந்தியாவில் திருநெல்வேலி நகரின் பாறையடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாறையடி பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் (32) என்பவர் இன்று தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரை திடீரென வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்துக் கொண்டு ஆவுடையப்பனை சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் அவரது உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலைச் சம்பவத்தை அடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், நெல்லை டவுன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை ஆரம்பித்தனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஆவுடையப்பனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும், கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவரது குடும்பத்தினரும் உறவினர்களும், உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், பாதுகாப்பு கருதி கூடுதல் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

