கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் இடுப்புப் பகுதியில் இணைந்த நிலையில் பிறந்திருந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சையை பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்து…
கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் இடுப்புப் பகுதியில் இணைந்த நிலையில் பிறந்திருந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சையை பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிறப்பு வைத்தியர்கள் இணைந்து மேற்கொண்டனர்.
அறுவைச் சிகிச்சையின் போது, ஒரு குழந்தைக்கே இருந்த இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை பிரித்து மற்றைய குழந்தைக்கு வெற்றிகரமாகப் பொருத்தும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இவ்வகையான சிகிச்சை உலகிலேயே முதல் முறையாக வெற்றிகரமாக இடம்பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்லையைச் சேர்ந்த தாயொருவருக்கு 2021 ஆம் ஆண்டு சிசேரியன் முறையில் இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். பின்னர் 2024 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இரு குழந்தைகளின் சிறுநீரக செயல்பாடுகளும் சீராகியதைத் தொடர்ந்து கடந்த மாதம் 10 ஆம் திகதி பிரிப்பு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீடித்த இந்த அறுவைச் சிகிச்சையின் போது குழந்தைகள் முழுமையான மயக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதயம், நுரையீரல், மூளை மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவை சீராகக் கண்காணிக்கப்பட்டதே சிகிச்சை வெற்றியடைய முக்கிய காரணமாக அமைந்ததாக மயக்க மருந்து நிபுணர்கள் தெரிவித்தனர்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்ட குழந்தைகள், விரைவில் சாதாரண விடுதிக்கு மாற்றப்படவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த குழந்தைகளைப் பிரிக்கும் அறுவைச் சிகிச்சை இலங்கையில் இதற்கு முன் ஒருமுறை மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், ஒரு குழந்தையிடமிருந்து சிறுநீரகத்தை மாற்றி மற்றைய குழந்தைக்கு பொருத்தி பின்னர் இருவரையும் வெற்றிகரமாகப் பிரித்திருப்பது உலக மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
குழந்தைகளின் உடல் எடை மற்றும் உடல்நிலை அறுவைச் சிகிச்சைக்கு ஏற்ற அளவுக்கு வளர்வதற்காக சுமார் ஐந்து ஆண்டுகள் காத்திருந்து இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உடல் அமைப்பு மிகவும் சிக்கலானதாக இருந்ததால், நரம்புகள் மற்றும் இரத்த நாள்களுக்கு சேதம் ஏற்படாமல் பிரிப்பது மருத்துவக் குழுவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனைமிக்க அறுவைச் சிகிச்சையில் 15 சிறப்பு வைத்தியர்கள் உட்பட சுமார் 30 பேர் கொண்ட மருத்துவக் குழு பங்கேற்றது. தற்போது குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதுடன், எதிர்காலத்தில் மேலும் சில சிகிச்சைகள் தேவைப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

