இலங்கை குடும்பம் ஒன்றை கசக்ஸ்தானுக்கு கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர். பெங்கொக் டொன் மியூவாங் சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த இலங்கை குடும்பத்தினர் முதலில் தமது சொந்த கடவு…
இலங்கை குடும்பம் ஒன்றை கசக்ஸ்தானுக்கு கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
பெங்கொக் டொன் மியூவாங் சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இலங்கை குடும்பத்தினர் முதலில் தமது சொந்த கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்துக்குள் நுழைந்து, அங்கிருந்து தரை வழியாக மலேசியாவுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர், மலேசியப் பெண் ஒருவரின் உதவியுடன், மலேசியக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கசக்ஸ்தான் செல்ல அவர்கள் முயன்றுள்ளனர். விசா இன்றி செல்ல வைக்கும் சர்வதேச கடத்தல் கும்பல் இதன்போது, மலேசியப் பெண், இலங்கை தம்பதியினரின் பிள்ளைகளை தனது சொந்த பிள்ளைகள் எனக் கூறி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.
எனினும், வானூர்தி நிறுவன அதிகாரிகள் ஆவணங்களில் இருந்த குளறுபடிகளைக் கண்டறிந்து அவர்களை விமானத்தில் ஏற அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதனால் தமது பயணத் திட்டத்தை மாற்றிய அந்தக் குழு, மியன்மார் வழியாக கசக்ஸ்தான் செல்ல முயன்றபோது டொன் மியூவாங் வானூர்தி நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், இலங்கைத் தாயும் மூத்த குழந்தையும் பிறருடைய மலேசியக் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
இளைய பிள்ளை மட்டுமே சட்டபூர்வமாக வழங்கப்பட்ட மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, மலேசியாவில் வெளிநாட்டு சிறார்களை அழைத்து வந்து, போலியாகப் பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று, அதன் மூலம் உண்மையான மலேசிய கடவுச்சீட்டுகளைத் தயாரித்து, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு விசா இன்றி செல்ல வைக்கும் சர்வதேச கடத்தல் கும்பல் குறித்து பிரித்தானியா, கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் முன்னரே எச்சரித்திருந்தன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்களும் பயண ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் குற்றச்சதியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் பிள்ளைகள் பாதுகாப்பான காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து தாய்லாந்து அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

